அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதட்டங்களால் ஏற்பட்ட பெரும் பிராந்திய இடையூறுகளுக்கு மத்தியிலும், எமிரேட்ஸ் குழுமம் 2025-26 நிதியாண்டில் சாதனை அளவிலான லாபத்தை அறிவித்துள்ளது.
துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தக் குழுமம் மார்ச் 31, 2026 அன்று முடிவடைந்த நிதியாண்டில் ஈட்டிய லாப விபரங்களை பின்வருமாறு அறிவித்துள்ளது:
- வரிக்கு முந்தைய லாபம்: 24.4 பில்லியன் திர்ஹம் (7% அதிகரிப்பு)
- வருவாய்: 150.5 பில்லியன் திர்ஹம் (3% அதிகரிப்பு)
- பண இருப்பு: 59.6 பில்லியன் திர்ஹம் (12% அதிகரிப்பு)
மேலும், இந்தக் குழுமம் எதிர்கால முதலீடுகளுக்காக 340 பில்லியன் திர்ஹம் ஒதுக்கியுள்ளதுடன், துபாய் முதலீட்டுக் கழகத்திற்கு (Investment Corporation of Dubai) 3.5 பில்லியன் திர்ஹம் ஈவுத்தொகையையும் (dividend) அறிவித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியிலும் வலுவான முடிவுகள்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான தாக்குதல்களால் வளைகுடாப் பகுதி முழுவதும் விமானப் போக்குவரத்து தடைபட்டதைத் தொடர்ந்து, நிதியாண்டின் இறுதி மாதம் பிராந்திய மோதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், நிறுவனத்தின் வலுவான வணிக மாதிரி, அது மீண்டு எழ உதவியது என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் மற்றும் குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “இந்த சிறப்பான முடிவுகள் எமிரேட்ஸ் குழுமத்தின் வணிக மாதிரியின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், உலகின் மிகவும் லாபகரமான விமான நிறுவனம் என்ற தனது நிலையை எமிரேட்ஸ் தக்கவைத்துக் கொண்டது.
விமான நிறுவனம் பதிவு செய்தவை:
- வரிக்குப் பிந்தைய நிகர லாபம்: 19.7 பில்லியன் திர்ஹம்ஸ்
- வருவாய்: 130.9 பில்லியன் திர்ஹம்ஸ்
- பயணிகள்: 53.2 மில்லியன்
பயணிகளின் எண்ணிக்கையும் இருக்கை கொள்ளளவும் சற்றே குறைந்தபோதிலும், எமிரேட்ஸ், குறிப்பாக பிரீமியம் வகுப்புகளுக்கான வலுவான தேவையைத் தக்கவைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், விமான நிறுவனத்தின் இயக்கச் செலவுகளில் 29% ஆக இருந்த எரிபொருள், அதன் மிகப்பெரிய செலவினமாகத் தொடர்ந்ததாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெரும் முதலீடுகள் தொடர்கின்றன
இந்த ஆண்டில், எமிரேட்ஸ் குழுமம் பின்வருவனவற்றில் 17.9 பில்லியன் திர்ஹாம் முதலீடு செய்ததாக அறிவித்துள்ளது:
- புதிய விமானங்கள்
- வசதிகள் மற்றும் உபகரணங்கள்
- மேம்பட்ட தொழில்நுட்பங்கள்
இந்த விமான நிறுவனம், சராசரியாக 10.8 ஆண்டுகள் பழமையான 277 விமானங்களைக் கொண்ட தனது விமானக் குழுமத்துடன் இந்த ஆண்டை நிறைவு செய்திருப்பதாக தலைமை நிர்வாகி ஷேக் அகமது தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக நிலவும் பிராந்திய நிலையற்ற தன்மை மற்றும் எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்களின் போது, எமிரேட்ஸின் வலுவான பண இருப்பு, அந்நிறுவனத்தைப் பாதுகாக்க உதவியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, காலதாமதமாகி வரும் Boeing 777X விமானங்களை அடுத்த ஆண்டில் பெற்றுக்கொள்ளவும் அந்த விமான நிறுவனம் தயாராகி வருவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். எனவே, இந்த விமானங்கள், காலாவதியாகி வரும் Airbus A380 ரக விமானங்களை படிப்படியாக மாற்றீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், dnata நிறுவனம் வரிக்குப் பிந்தைய லாபமாக 1.3 பில்லியன் திர்ஹம்களைப் பதிவு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பெருநிறுவன வரிகள் உயர்ந்ததன் காரணமாக, இந்த லாபத் தொகை கடந்த ஆண்டை விடச் சற்று குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel