ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே மரத்தாலான தோணி ஒன்று தீப்பிடித்து மூழ்கியதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததாக துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மேலும் நான்கு இந்தியப் பணியாளர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, கடலில் தீ விபத்து ஏற்பட்டபோது அந்தத் தோணியில் 18 இந்தியப் பணியாளர்கள் இருந்தனர். தோணி மூழ்குவதற்கு முன்பு, அவ்வழியாகச் சென்ற ஒரு கப்பல் மூலம் அனைத்துப் பணியாளர்களும் மீட்கப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மாலுமிகள் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், உதவி வழங்குவதற்காக தோணியின் உரிமையாளர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு குறுகிய ஆனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை அரபிக் வளைகுடாவை ஓமான் வளைகுடா மற்றும் அரபிக் கடலுடன் இணைக்கிறது. இது உலகின் மிகவும் பரபரப்பான எண்ணெய் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகும். மேலும், சமீபகாலமாக நடந்து வரும் பிராந்திய மோதல் மற்றும் கப்பல்கள், ட்ரோன்கள் சம்பந்தப்பட்ட பாதுகாப்புச் சம்பவங்கள் காரணமாக இங்கு பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel