நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மறைந்த ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயத் அல் நஹ்யான் அவர்களின் மறைவுக்குப் பிறகு, 2022, மே 14 அன்று ஒற்றுமையும் உணர்ச்சிப் பெருக்கும் நிறைந்த ஒரு தருணத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளர்கள் ஒன்றுகூடி, நாட்டின் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யான் அவர்களுக்குத் தங்கள் முழு ஆதரவை உறுதிமொழி அளித்தனர். அன்று முதல், பொருளாதார வளர்ச்சி, உலகளாவிய இராஜதந்திரம், நிலையான வளர்ச்சி முன்னெடுப்புகள் மற்றும் தேசிய மேம்பாட்டின் மீதான தீவிர கவனம் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட ஒரு மாற்றத்தின் காலகட்டத்தின் ஊடாக ஷேக் முகமது ஐக்கிய அரபு அமீரகத்தை வழிநடத்தி, உலக அரங்கில் அந்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.
இன்று, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானின் கீழ் உருவான ஒரு சகாப்தத்தை அமீரகம் நினைவு கூர்கிறது.
ஷேக் முகமதுவின் தலைமைத்துவத்தின் கீழ், நாட்டின் எண்ணெய் அல்லாத வெளிநாட்டு வர்த்தகம், 1 டிரில்லியன் டாலர் என்ற அளவைத் தாண்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கற்களை எட்டியுள்ளது. மேலும், 2025-ல், ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தது.
அதுமட்டுமில்லாமல், ஷேக் முகமது, அமீரகத்தை ஒரு முக்கிய இராஜதந்திர மத்தியஸ்தராகவும், உலகளாவிய சவால்களில் ஒரு தலைவராகவும் நிலைநிறுத்தியுள்ளார். 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டது உட்பட, உலகளாவிய மன்றங்களிலும் அவர் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார்.
இதனிடையே, மத்திய கிழக்கில் பிராந்திய ஸ்திரத்தன்மையையும் பொருளாதார ஒத்துழைப்பையும் வளர்த்து வருகிறார். அவரது நிர்வாகம் மனிதாபிமான ராஜதந்திரத்தில் தீவிரமாக ஈடுபட்டு, மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு முக்கிய உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, மக்கள் தான் முதன்மையானவர்கள் என்றும், அதிகாரமளித்தல் என்பது தகுதியிலிருந்து தொடங்குகிறது என்றும் அவரது தலைமைத்துவ தத்துவம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு வேகமாக வளர்ந்து வரும் ஒரு தேசத்தை வழிநடத்தும் ஜனாதிபதி என்ற பிம்பத்திற்குப் பின்னால், அரசியலுக்கும் அதிகாரத்திற்கும் வெகு காலத்திற்கு முன்பே பாலைவனம், ஒழுக்கம் மற்றும் ஆழ்ந்த மனிதநேயத்தால் செதுக்கப்பட்ட ஒரு மனிதராகவும் அவர் தனித்து நிற்கிறார். ஆம், அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான், பெரும் உலகளாவிய மாற்றங்களின் ஊடாக ஐக்கிய அரபு அமீரகத்தை வழிநடத்தியதற்காக மட்டுமல்லாமல், எளிமை, கடின உழைப்பு மற்றும் சேவையில் வேரூன்றிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததற்காகவும் அறியப்படுகிறார். நாட்டிற்காக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 18 மணி நேரம் உழைத்தது முதல், பயிற்சி பெற்ற இராணுவ விமானி, கவிஞர், பருந்துப் பயிற்சியாளர் மற்றும் மனிதாபிமானி எனப் பல பரிமாணங்களைக் கொண்ட அவரது பயணம், உலகெங்கிலும் உள்ள பலருக்குத் தெரியாத, அதிகம் அறியப்படாத ஒரு பக்கத்தை வெளிப்படுத்துகிறது.
1. அயராத உழைக்கும் பண்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி மிகக் குறைந்த வருடாந்திர விடுப்புடன், நாட்டிற்காக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 18 மணி நேரம் உழைக்கிறார். தனது கடினமான பணி அட்டவணை இருந்தபோதிலும், ஷேக் முகமது ஒரு எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கும், அனைத்துத் தரப்பு மக்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பதற்கும் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2. பணிவு மற்றும் எளிமையான தலைவர்
அவருக்கு நெருக்கமானவர்கள், விளம்பரத்தை விட செயலுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பணிவான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்று அவரை விவரிக்கின்றனர். ஷேக் முகமது சாதாரண குடிமக்களைச் சந்திப்பதையும், அவர்களின் கவலைகளை நேரடியாகக் கேட்பதையும் விரும்புவதாகவும், அவரது அமைதியான தலைமைப் பாணி கடினமான காலங்களில் மக்களுக்கு நம்பிக்கையை அளிப்பதாகவும் அமீரக ஜனாதிபதியின் இராஜதந்திர ஆலோசகரான டாக்டர் அன்வர் கர்காஷ் ஒருமுறை தெரிவித்துள்ளார்.
3. பள்ளி பருவத்தில் தொடங்கிய நட்புகள்

ஷேக் முகமதுவின் சிறுவயது நண்பர்களும், இளம் வயதிலிருந்தே அவரிடம் இருந்த அடக்கத்தையும் கருணையையும் நினைவுகூர்கின்றனர். முன்னாள் தூதரான மல் அல்லாஹ் முபாரக் சுவைத் அல் அமெரி, ஷேக் முகமதுவுடன் படித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஸ்தாபகத் தந்தையின் மகனாக இருந்தபோதிலும், அவர் ஒருபோதும் வித்தியாசமாக நடந்துகொண்டதில்லை என்று கூறியுள்ளார். மேலும், பள்ளி நாட்களில் நடந்த சாதாரண கால்பந்துப் போட்டிகளின்போதுகூட, எல்லாவற்றையும் மற்றவர்களுடன் சமமாகப் பகிர்ந்துகொண்ட ஒருவராகவும் அவரை அவர் விவரித்துள்ளார்.
4. மனிதாபிமானமிக்க மனம் கொண்டவர்

ஷேக் முகமதுவின் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று, 1980-களில் தான்சானியாவிற்கு (Tanzania) மேற்கொண்ட ஒரு பயணத்தின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அங்குள்ள ஏழை சமூகங்களைக் கண்ட பிறகு, ஷேக் சையத், “நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள்” என்று கூறியுள்ளார். இந்தப் பாடம், ஷேக் முகமதுவின் மனிதாபிமானத் தத்துவத்திலும், மதம் அல்லது தேசியம் பாராமல் மக்களுக்கு உதவும் அவரது அணுகுமுறையிலும் அடித்தளமிட்ட தருணங்களில் ஒன்றாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
5. தகுதிவாய்ந்த இராணுவ விமானி

அரசியலுக்கு அப்பால், ஷேக் முகமதுவுக்கு வலுவான இராணுவப் பின்னணியும் உண்டு. அவர் 1979-ல் புகழ்பெற்ற சாண்ட்ஹர்ஸ்ட் ராயல் மிலிட்டரி அகாடமியில் பட்டம் பெற்று, இராணுவ விமானியாகப் பயிற்சி பெற்றார். பல ஆண்டுகளாக, அவர் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய பிறகு, துணைத் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
6. பாலைவனத்துடனான பிணைப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி, அமீரகப் பாரம்பரியம் மற்றும் பாலைவன மரபுகளுடன் ஆழமாகப் பிணைந்துள்ளார். அவருக்குப் பருந்துப் பயிற்சி, அரேபியக் குதிரைகள், நபாதி கவிதை மற்றும் பெடோயின் கலாச்சாரம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் உண்டு என்று கூறப்படுகிறது.
7. பருந்து வேட்டை

2016-ஆம் ஆண்டில், எதிர்கால சந்ததியினருக்காக பாரம்பரிய அரேபிய பருந்து வேட்டையைப் (falconry ) பாதுகாக்கும் நோக்கில், அல் அய்ன் நகரில் முகமது பின் சையத் பருந்து வேட்டை மற்றும் பாலைவன முகவியல் பள்ளியை (Mohamed bin Zayed Falconry and Desert Physiognomy School) நிறுவினார்.
8. நபாத்தி கவிஞர்
ஷேக் முகமது ஒரு நபாத்தி கவிஞர் என்பது பலருக்கும் தெரியாது. அவரது கவிதைகள் அபுதாபியில் உள்ள கவிதை அகாடமியால் கல்வி ரீதியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன, இது அவரது வலுவான கலாச்சார மற்றும் இலக்கிய ஆர்வங்களைப் பிரதிபலிக்கிறது.
9. உலகளாவிய மற்றும் உள்ளூர் முயற்சிகளின் ஆதரவாளர்
அதுமட்டுமில்லாமல், முகமது பின் சையத் செயற்கை நுண்ணறிவுப் பல்கலைக்கழகம் (MBZUAI), முகமது பின் சையத் நீர் முன்முயற்சி மற்றும் முகமது பின் சையத் மனிதநேய அறக்கட்டளை உள்ளிட்ட பல முக்கிய கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் மனிதாபிமான முயற்சிகளுக்கு அவர் ஆதரவளித்துள்ளார்.
10. குடும்ப வாழ்க்கை

பல்வேறு உலகளாவிய பொறுப்புகள் இருந்தபோதிலும், ஷேக் முகமது குடும்ப வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அவர் ஷேக்கா சலாமா பின்த் ஹம்தான் அல் நஹ்யானை மணந்து, நான்கு மகன்கள், ஐந்து மகள்களுக்கு ஒரு நல்ல தந்தையாகவும், பல பேரக்குழந்தைகளுக்கு அன்பான தாத்தாவாகவும் இருக்கிறார்.
இத்தகைய பண்பு மற்றும் மாண்பு கொண்ட அமீரக ஜானதிபதி ஷேக் முகமது, நாட்டிற்கான தனது தொலைநோக்குப் பார்வை குறித்து ஒருமுறை கூறியதாவது: “ஐக்கிய அரபு அமீரகத்தின் செய்தி, நன்மை, அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் மனிதகுலத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக உழைப்பதாகவே தொடர்ந்து இருக்கும்.” என்று சுருக்கமாகக் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel