ADVERTISEMENT

துபாயில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அல் மக்தூம் விமான நிலையத் திட்டம்!!

Published: 16 Jun 2026, 10:20 AM |
Updated: 16 Jun 2026, 10:20 AM |
Posted By: Menaka

உலகின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் நோக்கில் வேகமாகச் செயல்பட்டு வரும் துபாயின் லட்சியத் திட்டமான ‘அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தின்’ (Al Maktoum International Airport) கட்டுமானப் பணிகள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் 15 மாதங்களில் 10 மில்லியனுக்கும் அதிகமான பணி நேரங்கள் இதில் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

‘துபாய் ஏவியேஷன் இன்ஜினியரிங் ப்ராஜெக்ட்ஸ்’ (Dubai Aviation Engineering Projects) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இத்திட்டத்தின் பல முக்கியக் கட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆயத்தப் பணிகள், ஓடுபாதை உள்கட்டமைப்பு மற்றும் எதிர்காலப் பயணிகள் முனையங்கள் மற்றும் விமான நிறுத்துமிடங்களுக்கான (aircraft gates) ஆரம்பக்கட்ட அடித்தளப் பணிகள் ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இப்பிரம்மாண்டமான திட்டப்பணியில் தற்போது சுமார் 9,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக ‘துபாய் ஏவியேஷன் இன்ஜினியரிங் ப்ராஜெக்ட்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பொறியாளர் சுசான் அல் அனானி தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமானப் பணிகள் உச்சகட்டத்தை அடையும்போது அடையும்போது இந்த எண்ணிக்கை சுமார் 120,000 ஆக உயரும் என்றும், இதன் மூலம் பல்வேறு துறைகளில் கணிசமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதுவரை எட்டப்பட்ட முக்கிய சாதனைகளில், 17,000-க்கும் மேற்பட்ட கான்கிரீட் தூண்கள் (piles) அமைத்தல், 45 மில்லியன் கன மீட்டருக்கும் அதிகமான நிலம் தோண்டும் பணி மற்றும் தற்போதுள்ள ஓடுபாதையைப் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள உதவும் வகையில் இரண்டாவது ஓடுபாதையை நிறைவு செய்தல் ஆகியவை அடங்கும். இத்திட்டத்தின் முக்கிய உள்கட்டமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக சுமார் 4.5 மில்லியன் கன மீட்டர் கான்கிரீட் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து மையம்

இத்திட்டம் முழுமையாக நிறைவடைந்ததும், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு 260 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளையும், 12 மில்லியன் டன்கள் வரையிலான சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். மேலும், இதன் மூலம் இது உலகின் மிகப்பெரிய விமான நிலைய மையமாகத் திகழும் என்றும் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

இந்த பிரம்மாண்ட விமான நிலையத்தில் தனித்தனியாகச் செயல்படும் ஐந்து இணையான ஓடுபாதைகள், இரண்டு பயணிகள் முனையங்கள் மற்றும் 430-க்கும் மேற்பட்ட விமான நிறுத்துமிடங்களுடன் இணைக்கப்பட்ட ஏழு பயணிகள் வளாகங்கள் (concourses) ஆகியவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தானியங்கி பயணிகள் போக்குவரத்து அமைப்பு (Automated People Mover system) மற்றும் வான்வழி, ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து வலைப்பின்னல்களை இணைக்கும் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதிகளும் இதில் அடங்கும்.

விமானப் போக்குவரத்து, சுற்றுலா, சரக்குக் கையாளுகை (logistics) மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றிற்கான ஒரு உலகளாவிய மையமாகத் துபாயின் நிலையை இந்த மேம்பாட்டுத் திட்டம் மேலும் வலுப்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

55 பில்லியன் திர்ஹம் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்கள்

அதிகாரிகளின் கூற்றுப்படி, இத்திட்டத்தின் அடுத்த கட்டப் பணிகள் கணிசமாக வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த ஆண்டின் இறுதிக்குள் 55 பில்லியன் திர்ஹமிற்கும் (Dh55 billion) அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்க அதிகாரிகள் தயாராகி வருவதாக அல் அனானி தெரிவித்துள்ளார்.

மேற்குப் பயணிகள் முனையத்தின் (Western Passenger Terminal) கட்டுமானம், கூடுதல் விமானப் பயணிகள் வளாகங்கள், தானியங்கி பயணிகள் போக்குவரத்து அமைப்பு, பயணப் பெட்டி (baggage) கையாளும் வசதிகள், முக்கியக் கட்டமைப்புச் சட்டங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மாவட்ட அளவிலான குளிரூட்டும் உள்கட்டமைப்பு (district cooling infrastructure) ஆகியவை இந்த ஒப்பந்தத் தொகுப்புகளில் அடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், விமான நிலையத்தின் வெளிப்புற முகப்புகள் மற்றும் கூரை அமைப்புகளை உள்ளடக்கிய கூடுதல் ஒப்பந்தங்களும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மேம்படுத்தல் பணிகள்

அல் மக்தூம் திட்டத்துடன் இணைந்து, துபாய் ஏவியேஷன் இன்ஜினியரிங் ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் முக்கிய மேம்படுத்தல் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேம்பாட்டுப் பணிகளில், முனையம் 3-க்கான அணுகு சாலைகளை மேம்படுத்துதல், முனையங்கள் 1 மற்றும் 3-க்குச் சேவை செய்யும் சாலை வலையமைப்பை மேம்படுத்துதல், விமானத்தளத்தை நவீனமயமாக்கும் திட்டங்கள், மற்றும் பயணிகளின் உடைமைகளைக் கையாளும் மற்றும் தொலைநிலை பயண ஏற்பாட்டு வசதிகளை விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமான நிலைய மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மொத்தம் 16 பில்லியன் திர்ஹாம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் 7.5 பில்லியன் திர்ஹாமிற்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

கட்டுமானப் பணிகள் வேகம் பெற்று, பில்லியன் கணக்கான திர்ஹம்கள் மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட உள்ள நிலையில், துபாயின் விமானப் போக்குவரத்துத் துறை ஒரு பிரம்மாண்ட மாற்றத்திற்கான கட்டத்திற்குள் நுழைகிறது. இது வரும் பத்தாண்டுகளுக்கு இந்த அமீரகத்தின் வளர்ச்சியையும் உலகளாவிய இணைப்பையும் வடிவமைக்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel