ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள தனியார் சுகாதார நிறுவனங்கள் புதிய விதிமுறையின் படி, தங்கள் வருடாந்திர ‘எமிராட்டிசேஷன்’ இலக்குகளில் 50 சதவீதத்தை சிறப்பு மருத்துவப் பணிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று மனித வளங்கள் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) அறிவித்துள்ளது.
நாட்டின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றான சுகாதாரத் துறையில், அமீரக நிபுணர்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும், நீண்ட கால வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட விதிகளின்படி, தனியார் சுகாதார நிறுவனங்கள் தங்கள் அமைப்பிற்குள் உள்ள சுகாதாரத் துறை சார்ந்த பணிகள் மற்றும் பிற திறன் சார்ந்த பணிகளுக்கு இடையே, குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு இலக்குகளை சமமாகப் பிரித்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்த புதிய விதிமுறைக்கான இணக்கம் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து மதிப்பீடு செய்யப்படும். அதுமட்டுமில்லாமல், இலக்குகளை அடையத் தவறும் நிறுவனங்கள் அபராதத்தைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தனியார் சுகாதாரத் துறையில் உள்ள வேலைவாய்ப்புப் போக்குகள் குறித்த விரிவான ஆய்வுக்குப் பிறகு, சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகத்துடன் இணைந்து இந்த முடிவு அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
50 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தனியார் சுகாதார நிறுவனங்கள், திறன் சார்ந்த பணிகளில் ஏற்கனவே ஆண்டுக்கு 2 சதவீத எமிராட்டிசேஷன் வளர்ச்சியை அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. தற்போதைய நடைமுறையின்படி, இந்த இலக்கில் பாதியை ஆண்டின் முதல் பாதியிலும், மீதமுள்ளதை ஆண்டின் இறுதியிலும் பூர்த்தி செய்ய வேண்டும்.
MoHRE அளித்துள்ள தகவலின்படி, 2025-ஆம் ஆண்டின் இறுதியில் தனியார் சுகாதாரத் துறையில் 8,800-க்கும் மேற்பட்ட அமீரகத்தினர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இதில் பெண்கள் 82 சதவீதப் பங்களிப்பை வகித்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து MoHRE-இன் தேசியத் திறன்கள் பிரிவின் உதவித் துணைச் செயலாளர் ஃபரிதா அல் அலி பேசுகையில், சுகாதார நிறுவனங்கள் தங்கள் தற்போதைய எமிராட்டிசேஷன் நிலைகளை மறுஆய்வு செய்யவும், புதிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தெளிவான திட்டங்களை உருவாக்கவும் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, தகுதியுள்ள அமீரக சுகாதார நிபுணர்களைப் பணியமர்த்தவும், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும் ‘நாஃபிஸ்’ (Nafis) தளத்தைப் பயன்படுத்துமாறு அவர் முதலாளிகளை ஊக்குவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து, சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் ஆதரவு சேவைகள் பிரிவின் பொறுப்பு உதவித் துணைச் செயலாளர் அப்துல்லா அஹ்லி கூறுகையில், சுகாதாரத் துறையில் அமீரகக் குடிமக்களின் இருப்பை வலுப்படுத்துவதற்கும், இத்துறையில் நிலையான தொழில் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த முடிவு அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
‘நாஃபிஸ்’ திட்டம் 2040 வரை நீட்டிக்கப்பட்டிருப்பது, எமிராட்டிசேஷன் மீதான ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்றும், இது அமீரகத் திறமையாளர்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதோடு, பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளில் கவர்ச்சிகரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel