அமீரகத்தில் கோடைக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், நாட்டின் சில பகுதிகளில் நிலையற்ற வானிலை மற்றும் கனமழை தொடர்வதால், அபுதாபியில் உள்ள பொதுப்பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் அதனுடன் இணைந்த கடற்கரைகளை தற்காலிகமாக மூடுவதாக அபுதாபி சிட்டி முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.
நிலையற்ற வானிலையின் போது குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கவும், பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், வெளிப்புற நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மழை காரணமாக பல சாலைகளில் அபுதாபி காவல்துறை வேக வரம்பை மணிக்கு 80 கி.மீ. ஆகக் குறைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட வழித்தடங்கள் பின்வருமாறு:
- ஸ்வைஹான்–நஹேல்
- அல் கஸ்னா–ரெமா
- உம் அல் ஊஷ்–அல் ரசீன்
- அல் ஃபாயா–அல் காதிம்
மழையின் போது கவனமாக வாகனத்தை ஓட்டவும், வேகத்தைக் குறைக்கவும், மாறிவரும் சாலை நிலவரங்களைப் பின்பற்றவும் வாகன ஓட்டிகளை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel