ADVERTISEMENT

துபாய் ஓட்டுநர்களுக்கு புதிய வசதி! 100 கண் பரிசோதனை மையங்கள் திறப்பு.. 5-10 நிமிடங்களில் சேவை!!

Published: 4 Aug 2026, 4:56 PM |
Updated: 4 Aug 2026, 4:59 PM |
Posted By: Menaka

துபாயில் ஓட்டுநர் உரிமம் பெறுவது அல்லது புதுப்பிப்பது இனி விரைவாகவும் எளிதாகவும் அமையவுள்ளது. ஏனெனில், துபாய் எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), அங்கீகரிக்கப்பட்ட கண் பரிசோதனை மையங்களின் (eye test center) எண்ணிக்கையை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம், வாகன ஓட்டிகள் கட்டாய கண் பரிசோதனைகள் மற்றும் உரிமம் புதுப்பித்தல் செயல்முறைகளை மிகக் குறைந்த நேரத்தில் முடிக்க முடியும்.

ADVERTISEMENT

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 100 புதிய அங்கீகரிக்கப்பட்ட கண் பரிசோதனை மையங்களை இணைத்ததன் மூலம் துபாய் முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் மொத்த எண்ணிக்கை 434-ஆக உயர்ந்துள்ளது.

கண் பரிசோதனை சேவைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய தரவுகளின் படி, நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் 8,54,213 கண் பரிசோதனை நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒப்பிட்டுப் பார்க்கையில், 2025-ஆம் ஆண்டு முழுவதும் 9,40,728 கண் பரிசோதனை முடிவுகள் முடிக்கப்பட்டு RTA-விடம் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

ஆணையத்தின் கூற்றுப்படி, அங்கீகரிக்கப்பட்ட கண் மருத்துவ மையங்கள் (optical centres), கண் மருத்துவமனைகள் மற்றும் RTA அமைப்புகளுக்கு இடையிலான டிஜிட்டல் இணைப்பு இந்தச் செயல்முறையை மிகவும் எளிதாக்கியுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் இப்போது ஒரே வருகையில் கட்டாய கண் பரிசோதனையை முடித்துவிட்டு, ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் பணிகளையும் மேற்கொள்ளலாம்.

கண் பரிசோதனைக்கு சராசரியாக ஐந்து முதல் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது என்றும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அதுமட்டுமின்றி, பரிசோதனை முடிவுகள் தானாகவே RTA-வின் அமைப்பிற்கு அனுப்பப்படுவதால், காகித ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ADVERTISEMENT

அனைத்து நடைமுறைகளும் முடிந்ததும், வாகன ஓட்டிகள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை இணையம் வழியாகப் புதுப்பித்துக்கொள்ளலாம் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை நேரடியாகத் தங்கள் ஸ்மார்ட்போன் வாலட்டில் (wallet) சேர்த்துக்கொள்ளலாம். அச்சிடப்பட்ட உரிமங்கள் கோரப்பட்டால் மட்டுமே வழங்கப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.

வாகன ஓட்டிகள் தேவையான கண் பார்வைத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்யவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், புதிய ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் மற்றும் உரிமம் புதுப்பித்தல் ஆகிய இரண்டிற்கும் கண் பரிசோதனை கட்டாயத் தேவையாகத் தொடர்கிறது என்று RTA தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை வசதிகள் எமிரேட் முழுவதும் உள்ள கண் மருத்துவ மையங்கள், கண் மருத்துவமனைகள், ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களில் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் தரநிலைகளைக் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துபாயின் உரிமம் வழங்கும் முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல சமீபத்திய முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதிய ஓட்டுநர்கள் நவீன வாகனப் பாதுகாப்பு அம்சங்களை நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையில், பார்வைப் புலனறி கண்காணிப்பு, பாதை விலகல் எச்சரிக்கை அமைப்புகள், தகவமைப்புக் பயணக் கட்டுப்பாடு, வாகன நிறுத்த உதவி, இரவுப் பார்வை மற்றும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) போன்ற மேம்பட்ட ஓட்டுநர் உதவித் தொழில்நுட்பங்கள் குறித்த பாடங்களை உள்ளடக்கி, இலகுரக வாகன உரிம விண்ணப்பதாரர்களுக்கான தனது ஓட்டுநர் பயிற்சிப் பாடத்திட்டத்தை RTA புதுப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel