ADVERTISEMENT

துபாய் மெட்ரோ ப்ளூ லைன் வழித்தடத்திற்கான சுரங்கப்பாதைப் பணிகளைத் தொடங்கி வைத்த ஷேக் முகமது!!

Published: 4 May 2026, 12:10 PM |
Updated: 4 May 2026, 12:10 PM |
Posted By: Menaka

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், மே 3, ஞாயிற்றுக்கிழமை அன்று துபாய் மெட்ரோ ப்ளூ லைனிற்கான சுரங்கப்பாதைப் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார். இது துபாயின் பொதுப் போக்குவரத்து விரிவாக்கத்தில் ஒரு முக்கிய படியாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

“உலகின் மிகப்புதிய மற்றும் அழகான மெட்ரோ” என்று வர்ணிக்கப்படும் இந்த 20.5 பில்லியன் திர்ஹம் மதிப்பிலான திட்டம், செப்டம்பர் 9, 2029 அன்று திறக்கப்பட உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. சுமார் 30 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடத்தில் 14.5 கி.மீ உயர்மட்டப் பாதையும், 15.5 கி.மீ சுரங்க பாதையும் அடங்கும்.

போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்வது என்பது எதிர்காலத்திற்கான முதலீடு என்று குறிப்பிட்ட ஷேக் முகமது, இந்தத் திட்டம் மேலும் இணைக்கப்பட்ட, திறமையான மற்றும் நீடித்த ஒரு நகரத்தை உருவாக்க உதவும் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

சுரங்கப்பாதைப் பணிகள் தொடக்கம்

துபாயின் இன்டர்நேஷனல் சிட்டி 1 நிலையத் தளத்தில், “அல் வுகைஷா” (Al Wugeisha) என்று பெயரிடப்பட்ட சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்தை (TBM) இயக்குவதற்கான சமிக்ஞையை ஷேக் முகமது வழங்கியதைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த சுரங்கப்பாதைப் பணிகள் மிர்டிஃப், ஆட்டோ மார்க்கெட் மற்றும் அல் வார்சன் (இன்டர்நேஷனல் சிட்டி 2) ஆகிய மூன்று திசைகளில் செல்லும் என்று RTA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த பிரம்மாண்டமான இயந்திரம் 163 மீட்டர் நீளமும், 2,000 டன்களுக்கும் அதிகமான எடையும் கொண்டதுடன், 24 மணி நேரமும் இயங்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், மேம்பட்ட டிஜிட்டல் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி, இது ஒரு நாளைக்கு 13 முதல் 17 மீட்டர் வரை தோண்டும் திறன் கொண்டது, அதே நேரத்தில் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திட்ட முன்னேற்றம்

இந்தப் பணியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், இத்திட்டம் தற்போது 20% நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாலும், பாலக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாலும், கட்டுமானப் பணிகள் வேகமாக முன்னேறி வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ், துபாய் க்ரீக்கின் மீது கட்டப்படும் 1.3 கி.மீ நீளமுள்ள மெட்ரோ பாலம் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும், ஏனெனில் இது இவ்வகையில் முதல் பாலமாகும். மேலும், இது அடுத்த ஆண்டு வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இப்பணி 30% நிறைவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

ப்ளூ லைன் சிறப்பம்சங்கள்

ப்ளூ லைன் வழித்தடத்தில் 14 நிலையங்கள் இடம்பெறும். இது சென்டர்பாயிண்டில் ரெட் லைனுடனும், க்ரீக்கில் கிரீன் லைனுடனும் இணைக்கப்படும்.

இது பின்வரும் வகையில் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:

  • போக்குவரத்து நெரிசலை 20% குறைக்கும்
  • முக்கியப் பகுதிகளுக்கு இடையேயான பயண நேரத்தை 10–25 நிமிடங்களாகக் குறைக்கும்
  • துபாய் சர்வதேச விமான நிலையத்தை ஒன்பது முக்கிய மண்டலங்களுடன் இணைக்கும்
  • துபாய் சிலிக்கான் ஓயாசிஸ் மற்றும் துபாய் அகாடமிக் சிட்டி போன்ற பகுதிகளுக்குச் சேவை செய்யும்

அதுமட்டுமில்லாமல், இந்த வழித்தடத்தில் உள்ள எமார் பிராப்பர்டீஸ் நிலையம், உலகின் மிக உயரமான மெட்ரோ நிலையமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான விரிவாக்கத் திட்டங்கள்

முழுவதும் தரைக்கடியில் அமையவிருக்கும், 18 நிலையங்கள் மற்றும் 34 பில்லியன் திர்ஹாம் பட்ஜெட்டைக் கொண்ட துபாய் மெட்ரோ கோல்ட் லைன் திட்டங்களுடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோல்ட் லைன் பின்வருவனவற்றைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது:

  • ஆண்டுதோறும் 40 மில்லியனுக்கும் அதிகமான சாலைப் பயணங்களைக் குறைக்கும்
  • 2040-ஆம் ஆண்டுக்குள் தினமும் சுமார் 465,000 பயணிகளுக்குச் சேவை செய்யும்
  • எதிஹாட் ரெயிலுடன் இணைக்கும்

ஒரு பக்கம் விமானப் போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் ஏற்படும் மேம்பாடுகளுடன், இந்த பெரிய அளவிலான திட்டங்கள் துபாயின் எதிர்காலத்தை மறுவடிவமைக்க உதவும் என்று ஷேக் முகமது தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel