துபாயானது, புதிதாகப் புனரமைக்கப்பட்ட கோர் அல் மம்சார் கடற்கரையைத் திறந்து வைத்துள்ளது. இது குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பல்வேறு நவீன வசதிகள், நீர் விளையாட்டுகள் மற்றும் தனித்துவமான ஈர்ப்புகளை வழங்குகிறது.
500 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான இந்தத் திட்டம், இரவு நேர நீச்சல் கடற்கரை, மிதக்கும் நடைபாதை, விளையாட்டுப் பகுதிகள் மற்றும் பேடல் மைதானம் போன்ற அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. இது நகரத்தின் மிகவும் மேம்படுத்தப்பட்ட கடற்கரை இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இரண்டு தனித்துவமான கடற்கரை அனுபவங்கள்
இந்த வளர்ச்சித் திட்டம் இரண்டு முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
அல் மம்சார் லகூன் கடற்கரை
கிட்டத்தட்ட 2.75 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள, குடும்பத்தினருக்கு உகந்த இந்த மண்டலத்தில் பின்வருவன அடங்கும்:
- 300 மீட்டர் நீளமுள்ள இரவு நேர நீச்சல் கடற்கரை
- குழந்தைகள் விளையாட்டுப் பகுதிகள் மற்றும் ஜிம்கள்
- கைப்பந்து, கால்பந்து மற்றும் பேடல் போன்ற நீர் விளையாட்டுகளுக்கான மண்டலங்கள்
- ஜெட் ஸ்கி (jet ski) மற்றும் நிழலான கடற்கரையோர இடங்கள்
அல் மம்சார் கார்னிச்
சுமார் 1.25 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பகுதி, மிகவும் தனிப்பட்ட மற்றும் பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது, இதில் பின்வருவன அடங்கும்:
- உலகின் முதல் 24/7 பெண்களுக்கான பிரத்யேக கடற்கரை
- விளையாட்டு வசதிகள் மற்றும் கலை நடைபாதைகள் (art walkways)
- பருவகால நிகழ்வுகளுக்கான இடங்கள்
அதுமட்டுமில்லாமல், இரண்டு மண்டலங்களையும் இணைக்கும் மிதக்கும் நடைபாதை ஒரு முக்கிய சிறப்பம்சமாகும், இதில் கடற்கரையோர உணவகம் ஒன்றும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, பார்வையாளர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, முன்பை விட கணிசமாக நீளமான 5.5 கி.மீ நடை மற்றும் சைக்கிள் ஓட்டும் பாதையையும் அனுபவிக்கலாம்.
பலதரப்பட்ட நீர் நடவடிக்கைகள்
நீர் நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, இந்தக் கடற்கரைக்கும் வரும் பார்வையாளர்கள் ஜெட் ஸ்கீயிங், கயாக்கிங், பேடில் போட் மற்றும் ஃப்ளைபோர்டிங் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளை அனுபவிக்கலாம்.
குறிப்பாக, அங்குள்ள மிதக்கும் நடைபாதையானது, மோட்டார் பொருத்தப்பட்ட மற்றும் மோட்டார் பொருத்தப்படாத நீர் விளையாட்டுகளைப் பிரித்து, அனைத்துப் பார்வையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது என்று துபாய் முனிசிபாலிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாதாரண பார்வையாளர்களைப் போலவே, மாற்றுத்திறனாளிகளும் இந்தக் கடற்கரையை முழுமையாக அணுக முடியும் என்றும், சக்கர நாற்காலி அணுகல், நீச்சல் நாற்காலிகள் மற்றும் பயிற்சி பெற்ற உயிர் காப்பாளர்கள் தளத்தில் உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டம், துபாயின் 3 பில்லியன் திர்ஹாம் மதிப்பிலான பெரிய கடற்கரை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது கொள்ளளவை 170% அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதல் ஆண்டில் 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel