ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள சமீபத்திய முன்னறிவிப்பில், இன்று (மே 7, வியாழக்கிழமை) வெப்பநிலை 45°C வரை உயரக்கூடும் என்றும், நாடு முழுவதும் உள்ள குடியிருப்பாளர்கள் கடும் வெப்பத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இன்றைய தினம் பொதுவாகத் தெளிவாகவும், அவ்வப்போது மேகமூட்டத்துடனும் காணப்படும் என்றும், அதேவேளையில் காற்று வடமேற்கு திசையிலிருந்து தென்கிழக்கு திசைக்கு மாறி, மணிக்கு 10–25 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 35 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அபுதாபியில் பகல்நேர வெப்பநிலை அதிகபட்சமாக 42°C வரையிலும், துபாயில் அதிகபட்ச வெப்பநிலை 40°C ஆகவும் பதிவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை அபுதாபியில் 26°C ஆகவும், துபாயில் 28°C ஆகவும் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், ஷார்ஜாவில் வெப்பநிலை 24°C முதல் 41°C வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலைப்பிரதேசங்களைப் பொறுத்தவரை, வெப்பநிலை சற்று குறைவாக, சுமார் 21°C அளவில் நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடல்சார் சூழலைப் பொறுத்தமட்டில், அரேபிய வளைகுடாவில் கடல் சீற்றம் லேசானது முதல் மிதமானது வரையிலும், ஓமன் கடலில் லேசான அளவிலும் இருக்கும் என்று NCM கூறியுள்ளது. வானிலை அறிக்கையின் படி, நிலப்பரப்பில் கடும் வெப்பம் நிலவினாலும், கடற்பகுதிகள் ஒப்பீட்டளவில் அமைதியாகவே காணப்படும்.
அமீரகம் முழுவதும் வெப்பநிலை கணிசமாக உயர்ந்து வருவதால், குடியிருப்பாளர்கள் போதுமான அளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும், அதிகபட்ச வெப்பம் நிலவும் நேரங்களில் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ளவும், கடும் கோடை வெயிலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel