ஷார்ஜா நீதிமன்றத்திற்கு எதிரே அமைந்துள்ள காலித் லகூனில் (Khalid Lagoon) வியாழக்கிழமை காலை ஒரு கார் நீருக்குள் மூழ்கியதைத் தொடர்ந்து, கடல்சார் மீட்புக் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு காருக்குள் இருந்த ஓட்டுநரை பாதுகாப்பாக மீட்ட சம்பவம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
ஷார்ஜா குடிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் தகவலின்படி, மே 14 அன்று காலை சுமார் 7:04 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அச்சமயத்தில் கடல்சார் மீட்புப் பணியாளர்கள் அப்பகுதியில் வழக்கமான காலை நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்ததால், வாகனம் தண்ணீரில் விழுவதைப் பார்த்துள்ளனர்.
இதையடுத்து சில கணங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்புப் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் (divers) நீருக்கடியில் மூழ்கியிருந்த காரை அடைந்து, எட்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் ஓட்டுநரை பத்திரமாக மீட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வெற்றிகரமான மீட்பு நடவடிக்கை, கடல்சார் மீட்புப் பிரிவுகளின் உயர்நிலைத் தயார்நிலை, தொழில்முறைத் திறன் மற்றும் துரிதச் செயல்பாட்டுத் திறன்களைப் பிரதிபலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காருக்குள் இருந்து மீட்கப்பட்ட ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தேசிய ஆம்புலன்ஸ் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், மருத்துவ சிகிச்சை பெற்ற பிறகு அவர் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்..
தொடர் களப் பயிற்சிகளும் அவசரக்காலத் தயார்நிலையும் இந்தத் துரித மீட்பில் முக்கியப் பங்கு வகித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். மேலும், எமிரேட் முழுவதும் உயிர்களைப் பாதுகாப்பதிலும் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் இத்தகைய துரிதச் செயல்பாடுகள் இன்றியமையாதவை என்பதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel