சமூக ஊடகங்களில் அவதூறாகவும், கிண்டலாகவும் கருத்துகளைப் பகிர்வது, இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் தகாத கருத்துகளை கமெண்ட் செய்ததற்காக அவதூறு புகாரின் அடிப்படையில், ஒரு பெண் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் எதிர்மறையான அல்லது கிண்டலான கருத்துக்களைப் பதிவிடுவதற்கு முன்பு கவனமாகச் சிந்திக்குமாறு சட்ட வல்லுநர்கள் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்தப் பெண் ஆன்லைனில் பதிவிட்ட ஒரு கருத்து தொடர்பான புகாரின் பேரில் அஜ்மானில் தேடப்படுகிறார் என்று காவல்துறை தெரிவித்ததை அடுத்து, அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் திரும்பியபோது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார். அவரது கணவரும் குழந்தைகளும் இமிக்ரேஷன் சோதனையைத் தொடர அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் அஜ்மானுக்கு மாற்றப்படுவதற்கு முன்பு இரவு முழுவதும் காவலில் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காவல்துறை அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு அந்தப் பெண் என்ன கமெண்ட் செய்திருப்பார் என்று நம்மில் பலருக்கும் சந்தேகம் எழலாம்.
இந்த வழக்கு குறித்து பேசிய லெப்டினன்ட் கர்னல் டாக்டர் முகமது பின் ஹஸீம் அல் சுவைதி அவர்கள், இந்த வழக்கு ஒரு சாதாரண இன்ஸ்டாகிராம் கருத்திலிருந்து உருவானதாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.
அதாவது, குற்றம்சாட்டப்பட்ட அந்தப் பெண் மற்றொரு பெண் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தில், அதில் காட்டப்பட்டிருந்த ஆடம்பரக் ஹேண்ட்பேக்கை “fake” என்று கமெண்ட் செய்திருக்கிறார். இங்கிருந்து இந்த வழக்கு தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கருத்து பலருக்கும் சாதாரணமானதாகத் தோன்றக்கூடும். ஆனால், அந்தப் பையின் உரிமையாளருக்கு எதிராக ஆன்லைன் கேலியையும் துன்புறுத்தலையும் தூண்டியதாகக் கூறி, அவர் சட்டப் புகார் அளித்ததால் அவமதிப்புச் சட்டங்களின் கீழ் அந்தப் பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வழக்கைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் இணையக் குற்றச் சட்டங்கள், நேரடியான அவமதிப்புகள் அல்லது அச்சுறுத்தல்களுக்கு மட்டுமல்லாமல், ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தால் அல்லது அவரைப் பொது அவமானத்திற்கு உள்ளாக்கினால், நகைச்சுவை, கிண்டல் அல்லது தனிப்பட்ட கருத்துக்களாக முன்வைக்கப்படும் கருத்துகளுக்கும் பொருந்தும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் இணையக் குற்றச் சட்டங்களின் கீழ், இணையவழி அவதூறு அல்லது அவமதிப்புகளுக்குச் சிறைத் தண்டனை மற்றும் 250,000 திர்ஹம் முதல் 500,000 திர்ஹம் வரையிலான அபராதங்கள் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளனர். சில சமயங்களில், அதிகாரிகள் பயணத் தடைகளை விதிக்கலாம், டிஜிட்டல் சாதனங்களைப் பறிமுதல் செய்யலாம் அல்லது வெளிநாட்டவர்களுக்கு எதிராக நாடு கடத்தும் நடவடிக்கைகளைத் தொடரலாம் என்றும் விளக்கமளித்துள்ளனர்.
ஒருவர் போலியான பொருட்களைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டுவது, அந்தக் குற்றச்சாட்டு பொய்யென நிரூபிக்கப்பட்டால் கூடுதல் சட்ட அபாயங்களை உருவாக்கக்கூடும் என்றும், குறிப்பாக அந்தக் கருத்து இணையத்தில் பரவலாகப் பரவி அந்த நபரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தால் புகார்தாரரின் சமூக அந்தஸ்தை நேரடியாகப் பாதிக்கும் தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களை வெளியிடுவதாக மாறக்கூடும் என்று வல்லுநர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஒரு பதிவை பின்னர் நீக்குவது என்பது பொறுப்பிலிருந்து முழுமையாக விடுபட வழிவகுக்காது என்றும், ஏனெனில் ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் காப்பகப்படுத்தப்பட்ட உள்ளடக்கங்கள் விசாரணைகளின் போது ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் சட்ட ஆலோசகர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
ஆகவே, இணையத்தில் சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைத் தவிர்க்குமாறும், சமூக ஊடகங்களில் தனிப்பட்ட அனுபவங்களைப் பகிரும்போது நடுநிலையான மொழியைப் பயன்படுத்துமாறும் அதிகாரிகளும் சட்ட வல்லுநர்களும் தற்போது குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel