ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் அதன் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஊதியப் பாதுகாப்பு அமைப்பின் (WPS) கீழ் ஒரு புதிய விதியை அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
புதிய விதிகளின் படி, அனைத்து தனியார் துறை நிறுவனங்களும் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் முந்தைய மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும். மேலும், ஜூன் 1, 2026 முதல், இந்தத் தேதிக்குப் பிறகு செய்யப்படும் எந்தவொரு தொகையும் அதிகாரப்பூர்வமாக தாமதமானதாகக் கருதப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்தால் (Mohre) வெளியிடப்பட்ட இந்த புதிய ஒழுங்குமுறை, ஊதியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், தொழிலாளர் சந்தை முழுவதும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விதிகளின்படி, நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட WPS வழிகள் மூலம் சம்பளத்தை வழங்க வேண்டும் மற்றும் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
85% சம்பள விதி
அதுமட்டுமில்லாமல், சம்பளம் வழங்குதலில் நிறுவனங்களின் இணக்கம் என்பது எதைக் குறிக்கிறது என்பதையும் ஐக்கிய அரபு அமீரகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு நிறுவனம், ஊழியர்களுக்குச் செலுத்த வேண்டிய மொத்த ஊதியத்தில் குறைந்தபட்சம் 85 சதவீதத்தை சரியான நேரத்தில் வழங்கினால், அது இணக்கமாகக் கருதப்படும், குறிப்பாக சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட பிடித்தங்கள் சம்பந்தப்பட்ட நேர்வுகளில் இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல், தங்களுக்கு உரிமையுள்ள சம்பளத்தில் குறைந்தபட்சம் 85 சதவீதத்தைப் பெறும் தொழிலாளர்கள், இந்த முறைமையின் கீழ் சம்பளம் பெற்றவர்களாகவே கருதப்படுவார்கள். இருப்பினும், செலுத்தப்படாத மீதமுள்ள தொகையைக் கோருவதற்கான உரிமையை அவர்கள் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தாமதமான சம்பளங்களுக்குக் கடுமையான தண்டனைகள்
இவற்றுடன், சம்பளம் வழங்குவதைத் தாமதப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கடுமையாக்குவதற்கான ஒரு கால அட்டவணையையும் அதிகாரிகள் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.
- காலக்கெடுவிற்குப் பிறகு 2-வது நாளிலிருந்து: நிறுவனங்கள் எச்சரிக்கைகளையும் அறிவிப்புகளையும் பெறும்.
- 5-வது நாளிலிருந்து: புதிய பணி அனுமதிகள் இடைநிறுத்தப்படும்.
- 11-வது நாளிலிருந்து: நிர்வாக அபராதங்கள் விதிக்கப்படும் மற்றும் நிறுவனங்களின் வகைப்பாடு குறைக்கப்படலாம்.
- 16-வது நாளிலிருந்து: தொழிலாளர்களின் சார்பாகத் தொழிலாளர் தகராறுகள் தானாகவே பதிவு செய்யப்படும் மற்றும் பணி அனுமதி இடைநிறுத்தங்கள் நீட்டிக்கப்படும்.
- 21-வது நாளிலிருந்து: அதிகாரிகள் நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொருட்களைப் பறிமுதல் செய்யலாம் மற்றும் பொறுப்பான நிறுவன அதிகாரிகளுக்குப் பயணத் தடைகளையும் விதிக்கலாம்.
மேலும், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை உள்ளடக்கிய நிறுவனங்களின் தொடர்ச்சியான மீறல்கள், அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் பரிந்துரைக்கப்படுவதற்கும் வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விலக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகள்
இந்தத் தீர்மானம் WPS அமைப்பின் கீழ் உள்ள விலக்குகளையும் பட்டியலிடுகிறது. இதில், ஊதியப் பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், ஊதியமில்லா விடுப்பில் உள்ள ஊழியர்கள், சட்டப்பூர்வ தடுப்புக்காவலில் உள்ள தொழிலாளர்கள், குறிப்பிட்ட மாலுமிகள், குறுகிய காலப் பணி ஊழியர்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே ஊதியம் பெறும் சில வெளிநாட்டு ஊழியர்கள் ஆகியோர் அடங்குவர்.
மீன்பிடிப் படகுகள், தனிநபர் உரிமையிலான பொது டாக்சிகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற குறிப்பிட்ட சில துறைகளும் இத்திட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.
அமீரகத்தில் உள்ள தனியார் துறையெங்கும் ஊதியங்களை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்யவும், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ள மிகவும் வலுவான நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel