ஈத் அல் அதா பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இஸ்லாமியர்கள் குர்பானி கொடுக்க தயாராவதால், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள கால்நடைச் சந்தைகளில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பண்டிகைக்கு முன்னதாக ஆடுகளின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும், வெவ்வேறு இனங்களைச் சரிபார்க்கவும், ஒவ்வொரு ஆண்டும் சந்தையை நிரப்பும் கடைசி நேர ஈத் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் குடும்பங்கள் ஏற்கனவே ஷார்ஜா கால்நடைச் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன.
இந்த ஆண்டு, பிராந்திய கப்பல் போக்குவரத்து இடையூறுகள் காரணமாக, வாங்குபவர்களிடையே மிகவும் விரும்பப்படும் தேர்வுகளில் ஒன்றான இந்திய ஆடுகள், தற்போது கடல்வழிப் போக்குவரத்திற்குப் பதிலாக விமான சரக்கு மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்ததை அடுத்து, அமீரகவாசிகள் விலைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். பலரும் எதிர்பார்த்தபடியே, இந்த மாற்றம் சந்தையில் விலைகளை சற்றே உயர்த்தியுள்ளது.
சந்தை வியாபாரிகளின் கூற்றுப்படி, ஆடுகளின் விலை தற்போது சுமார் 800 திர்ஹம்ஸில் இருந்து தொடங்கி, இனம், அளவு மற்றும் எடையைப் பொறுத்து 2,200 திர்ஹம்ஸைத் தாண்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்திய ஆடுகள் 900 திர்ஹம் முதல் 1,600 திர்ஹாம் வரையிலும், சோமாலிய ஆடுகள் 1,000 திர்ஹம் முதல் 2,000 திர்ஹம் வரையிலும் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கணிசமாக விலை உயர்வு இருந்தபோதிலும், குறிப்பாக 1,000 முதல் 1,500 திர்ஹம் வரையிலான பட்ஜெட் கொண்ட குடும்பங்களிடையே தேவை வலுவாக இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
வீடுகளில் கால்நடைகளை வளர்க்க இடம் இல்லாததால், பல அடுக்குமாடி குடியிருப்பாளர்களும் முன்கூட்டியே ஆடுகளைத் தேர்ந்தெடுக்க சந்தைக்கு அதிகாலையிலேயே வருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், வாடிக்கையாளர்கள் இப்போது ஆடுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்து பணம் செலுத்தலாம் என்றும், ஈத் பண்டிகை வரை அந்த ஆடுகள் சந்தைக் கொட்டகைகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், எதிர்பார்க்கப்படும் பண்டிகைக் கால கூட்ட நெரிசலைக் குறைக்கவும், ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், ஷார்ஜா அதிகாரிகள் வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேக பாதைகள், கூடுதல் இறைச்சி வெட்டுபவர்கள் மற்றும் பணியாளர்கள், காத்திருப்பு கூடாரங்கள் மற்றும் பலியிடும் ஆணைகளைக் கண்காணிக்க ஒரு புதிய அமைப்பு உள்ளிட்ட புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அறுத்தல், சுத்தம் செய்தல், பரிசோதித்தல் மற்றும் இறைச்சியை எடுத்தல் உள்ளிட்ட முழுமையான செயல்முறைக்கு, சாதாரண சூழ்நிலைகளில் பொதுவாக 20 முதல் 25 நிமிடங்கள் ஆகும் என்றும், இருப்பினும் ஈத் பண்டிகையின் உச்ச நேரங்களில் காத்திருப்பு நேரம் அதிகரிக்கக்கூடும் என்பதையும் அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ஷார்ஜா கால்நடைச் சந்தையானது, ஈத் தொழுகை முதல் ஈத் அல் அதாவின் முதல் நாள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel