அதிகரித்த பார்க்கிங் மற்றும் சுங்கக் கட்டணங்கள் முதல் கடுமையான சம்பள வழங்கல் விதிமுறைகள் வரை, பல முக்கிய மாற்றங்கள் ஜூன் 1 முதல் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தப் புதிய மாதம், குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கை, நிதி மற்றும் சட்டப் பொறுப்புகளைப் பாதிக்கக்கூடிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் ஆறு முக்கிய மாற்றங்கள் இதோ:
1. சட்டப்பூர்வ வயது வரம்பு 18 ஆகக் குறைக்கப்பட்டது
ஐக்கிய அரபு அமீரகம், சட்டப்பூர்வ வயது வரம்புக்கான வயதை 21 ஆண்டுகளில் இருந்து 18 ஆண்டுகளாக அதிகாரப்பூர்வமாகக் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதன் பொருள், 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தனிநபர்கள் ஒப்பந்தங்களில் ஈடுபடவும், தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கவும், நிதி முடிவுகளை எடுக்கவும் மற்றும் சட்ட விஷயங்களில் தங்களைத் தாங்களே பிரதிநிதித்துவப்படுத்தவும் முழு சட்டத் தகுதியைப் பெறுவார்கள். இந்த மாற்றம் அமீரகத்தை சர்வதேச தரங்களுடன் இணைக்கிறது மற்றும் பாஸ்போர்ட்கள், பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் தொடர்பான சட்ட நடைமுறைகளை எளிதாக்குகிறது.
2. துபாய் பார்க்கிங் கட்டணங்கள்
பார்க்கின் (Parkin) நிறுவனம் அனைத்து பார்க்கிங் சேவைகளுக்கும் 5 சதவீத மதிப்புக்கூட்டு வரியை (VAT) அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, துபாயில் உள்ள வாகன ஓட்டிகள் ஜூன் 1 முதல் பொது பார்க்கிங் இடங்களுக்குச் சற்று அதிகமாகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த வரி, சாலையோர மற்றும் சாலையோரமல்லாத பார்க்கிங் , அத்துடன் பருவகால அனுமதிகள், முன்பதிவுகள் மற்றும் பார்க்கிங் சந்தாக்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும். இது தினசரி பயனர்களுக்கான போக்குவரத்துச் செலவுகளை அதிகரிக்கிறது.
3. தனியார் துறை ஊழியர்களுக்கான புதிய சம்பள விதி
அமீரகத்தில் புதிய ஊதியப் பாதுகாப்பு அமைப்பு விதியின்படி, தனியார் துறை நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளன்று முந்தைய மாத வேலைக்கான சம்பளத்தை வழங்க வேண்டும்.
நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட பர்ரிவர்த்தனை வழிகள் மூலம் ஊதியத்தைச் செலுத்தி, அதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டிய மொத்த ஊதியத்தில் குறைந்தபட்சம் 85 சதவீதத்தைச் செலுத்தும் நிறுவனங்கள், சில நிபந்தனைகளின் கீழ் விதிமுறைகளுக்கு இணங்கியவையாகக் கருதப்படலாம்.
4. சாலிக் சுங்கக் கட்டணம்
ஜூன் 1 முதல், துபாய் வாகன ஓட்டிகள் சாலிக் டோல் கேட் கட்டணங்கள் மற்றும் வாகனப் பதிவு அட்டை செயல்படுத்தும் கட்டணங்களுக்கு 5 சதவீத மதிப்புக்கூட்டு வரியை (VAT) செலுத்த வேண்டும்.
சுங்கக் கட்டணக் கட்டமைப்பில் மாற்றம் இல்லை என்றாலும், இந்த வரி விதிப்பின் காரணமாக, உச்ச நேரக் கட்டணம் 6 திர்ஹம்ஸிலிருந்து 6.30 திர்ஹம்ஸ் ஆகவும், மற்ற நேரக் கட்டணம் 4 திர்ஹம்ஸிலிருந்து Dh4.20 திர்ஹம்ஸ் ஆகவும் உயரும்.
5. இந்தியத் தூதரக சேவை மையங்களைத் திறக்க அல்ஹிந்த் திட்டம்
அல்ஹிந்த் குழுமம், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இந்தியக் குடிமக்களுக்காக 16 தூதரக, பாஸ்போர்ட் மற்றும் விசா சேவை மையங்களைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
சேவைகள் ஜூலை 1 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், ஜூன் மாத நடுப்பகுதிக்குள் அனைத்து மையங்களும் செயல்பாட்டுக்கு வரும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்த மையங்கள் பாஸ்போர்ட் புதுப்பித்தல், விசா விண்ணப்பங்கள், OCI அட்டைகள், காவல்துறை அனுமதிச் சான்றிதழ்கள், ஆவணச் சான்றளிப்பு மற்றும் பிற தூதரக சேவைகளைக் கையாளும் என்று கூறப்படுகிறது.
6. துபாய் பார்க்கிங் மீட்டர்களில் ரொக்கப் பணம் செலுத்தும் முறை படிப்படியாக நீக்கம்
ஜூன் 1 முதல் பார்க்கிங் மீட்டர்களில் ரொக்கப் பரிவர்த்தனைகளை படிப்படியாக நீக்குவதன் மூலம், துபாய் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையை நோக்கிய தனது முயற்சியைத் தொடரும்.
ஆகவே, வாகன ஓட்டிகள் நோல் அட்டைகள், பார்க்கின் செயலி, ‘DubaiNow’ செயலி, RTA செயலி மற்றும் SMS சேவைகளைப் பயன்படுத்தி தொடர்ந்து பணம் செலுத்த வேண்டியிருக்கும். வேகமான மற்றும் வசதியான பார்க்கிங் அனுபவத்திற்காக, டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கின்றனர்.
இன்றுடன் மே மாதம் முடிவடைந்து நாளை ஜூன் மாதம் தொடங்கும் நிலையில், டிஜிட்டல் மாற்றம், பொருளாதாரத் திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட பொதுச் சேவைகள் ஆகியவற்றில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடர்ச்சியான கவனத்தைப் பிரதிபலிக்கும் ஒழுங்குமுறை, நிதி மற்றும் சேவை தொடர்பான மாற்றங்களின் கலவையை குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel