துபாயின் மையப்பகுதியில் சுமார் 1,50,000 குடியிருப்பாளர்கள் வசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, 200 பில்லியன் திர்ஹம் மதிப்பிலான பிரம்மாண்டமான திட்டத்தை ‘எமார் ப்ராப்பர்டீஸ்’ (Emaar Properties) அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதால், நகரத்தின் மிகப்பெரிய நகர்ப்புறக் குடியிருப்புகளில் ஒன்று விரைவில் வரவிருக்கிறது.
கிட்டத்தட்ட 4.5 மில்லியன் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட இத்திட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்கள், ஆடம்பர வில்லாக்கள், பிரம்மாண்டமான தனி வீடுகள் (mansions), அலுவலகங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், கலாச்சார மையங்கள் மற்றும் பொது வசதிகள் ஆகியவை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் பெயர் அல்லது துல்லியமான இடத்தை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இது குறித்த முழுமையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இத்திட்டம், குடியிருப்பாளர்கள் வசிப்பதற்கும், பணிபுரிவதற்கும் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்கும் மிகக் குறைந்த நேரமே தேவைப்படும் வகையிலான, தன்னிறைவு கொண்ட ஒரு சமூகமாக வடிவமைக்கப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதன் முதன்மைத் திட்டம் ’20 நிமிட நகரம்’ (20-minute city) என்ற கோட்பாட்டைப் பின்பற்றுகிறது. இதன்படி வீடுகள், பணியிடங்கள், பள்ளிகள், மருத்துவ வசதிகள், மசூதிகள், வணிக மையங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் அனைத்தும் மக்கள் நடந்து செல்லும் வகையிலான சூழலில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
அதுமட்டுமில்லாமல், இப்பகுதியில் நவீன போக்குவரத்துத் தீர்வுகள் (smart mobility), முன்மொழியப்பட்ட மெட்ரோ இணைப்பு, மிதிவண்டிப் பாதைகள், மின்சார வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் செயலி (app) சார்ந்த சமூக சேவைகள் ஆகியவையும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான தகவல்களின் படி, பசுமையான இடங்கள், அழகாக வடிவமைக்கப்பட்ட பூங்காக்கள், ஏரிகள், நீர்ப்பகுதிகள், நிழல் தரும் நடைபாதைகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளால் சூழப்பட்ட, உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஆடம்பர வில்லாக்கள் கலந்த ஒரு வாழ்க்கைச் சூழலை இங்குள்ள குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம். கூடுதலாக, ஒரு பெரிய மையப் பூங்காவில் விளையாட்டு மைதானங்கள், நிகழ்ச்சிகளுக்கான இடங்கள், நல்வாழ்வு மையங்கள் (wellness areas), நீர் விளையாட்டுப் பகுதிகள் (splash parks) மற்றும் கடற்கரை போன்ற அம்சங்கள் இடம்பெறும்.
இத்திட்டம் வணிக மையம், நகர்ப்புறப் பகுதி, குடும்பங்களுக்கான குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பிரத்யேகமான, பாதுகாக்கப்பட்ட வில்லா வளாகம் என ஐந்து தனித்தனி மண்டலங்களாகப் பிரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் குறித்துப் பேசிய எமார் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் நிறுவனர் முகமது அலப்பார் (Mohamed Alabbar), இது நிறுவனத்தின் மிக முக்கியமான மற்றும் லட்சியம் மிக்க திட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இது ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிர்காலம் மற்றும் பெரிய அளவிலான புதுமை மற்றும் வளர்ச்சியை ஆதரிக்கும் அதன் திறன் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இத்திட்டம் துபாயின் மிக முக்கியமான ரியல் எஸ்டேட் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த இடங்களுள் ஒன்றாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீடு, சுற்றுலா மற்றும் நவீன நகர்ப்புற வாழ்க்கைக்கான உலகளாவிய மையமாக துபாயின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்றும் ரியல் எஸ்டேட் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel