ADVERTISEMENT

துபாய் ஏர்போர்ட்டில் தொலைந்த 1,03,000 திர்ஹம் மதிப்புள்ள பொருட்கள்.. வெற்றிகரமாக மீட்டுக் கொடுத்த துபாய் காவல்துறை!!

Published: 14 Jun 2026, 8:10 PM |
Updated: 14 Jun 2026, 8:10 PM |
Posted By: Menaka

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட 1,03,000 திர்ஹம் மதிப்பிற்கும் அதிகமான ஆடம்பரக் கடிகாரங்கள் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் இருந்த பையைத் துபாய் காவல்துறை வெற்றிகரமாக மீட்டுக் கொடுத்த சம்பவம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

ADVERTISEMENT

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1-ல் (Terminal 1) உள்ள வருகைப் பகுதியில் (arrivals area) தொலைந்துபோன, GCC நாட்டைச் சேர்ந்த ஒருவரின் பையை மீட்டதன் மூலம், தொலைந்த பொருட்களைக் கண்டறிவதில் துபாய் காவல்துறை மீண்டும் ஒருமுறை தங்கள் விரைவான செயல்பாட்டை நிரூபித்துள்ளது.

பயணி தனது பை தொலைந்துபோனது குறித்து விமான நிலையத்தின் ‘தொலைந்த மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்’ (Lost and Found) பிரிவிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாகத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியதாக பாதுகாப்புக் பிரிவின் இயக்குனர் கர்னல் அப்துல்லா பைசல் அல் டோசரி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அதிகாரியின் கூற்றுப்படி, பாதுகாப்புப் படையினர் முனையத்திற்குள் அந்தப் பயணி சென்ற இடங்களை ஆய்வு செய்தனர் மற்றும் தொலைந்த பொருளைக் கண்டறியக் கால்நடை ரோந்துப் படையினரை (foot patrol) பணியில் ஈடுபடுத்தினர். இறுதியில், அந்தப் பை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுப் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

மேலும் இந்த சோதனையின்போது, ​​அந்தப் பையில் மொத்தம் 1,03,880 திர்ஹம் மதிப்புள்ள மூன்று ஆடம்பரக் கடிகாரங்கள், ஒரு லேப்டாப் மற்றும் ஒரு டேப்லெட் (tablet) ஆகியவை இருந்தது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ADVERTISEMENT

அதன் பிறகு, தேவையான சரிபார்ப்பு மற்றும் சட்ட நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, அப்பொருட்கள் அதன் உண்மையான உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, பயணிகளின் உடைமைகளைப் பாதுகாப்பதில் துபாய் காவல்துறையின் தொழில்முறை அணுகுமுறை, செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டிய அந்த உரிமையாளர், காவல்துறையினருக்குத் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

துபாய் காவல்துறை மேற்கொண்ட வெற்றிகரமான மீட்பு நடவடிக்கைகளின் வரிசையில் இந்தச் சம்பவமும் இணைந்துள்ளது. சமீபத்திய மாதங்களில், விமானம் புறப்படுவதற்கு முன் 20,000 டாலர் ரொக்கம் மற்றும் தங்கம் இருந்த பையை மீட்டுக் கொடுத்தது, சுமார் 2 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள வெள்ளிப் பட்டிகள் இருந்த கைப்பையை மீட்டது மற்றும் தொலைந்துபோன பாஸ்போர்ட் மற்றும் மொபைலை ஒரு சுற்றுலாப் பயணியிடம் சில மணிநேரங்களிலேயே ஒப்படைத்தது போன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

துபாய் காவல்துறை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தொலைந்த பொருட்கள் தொடர்பான வழக்குகளைக் கையாண்டு வருகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் அதிகாரிகள் 1,71,000-க்கும் மேற்பட்ட தொலைந்த பொருட்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அதேவேளையில், எமிரேட் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ‘ஸ்மார்ட் காவல் நிலையங்கள்’ (Smart Police Stations) மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்த லட்சக்கணக்கான புகார்களும் கையாளப்பட்டுள்ளன.

அமீரகத்தில் குடிமக்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் மதிப்புமிக்க உடைமைகளை விரைவாகவும் திறமையாகவும் மீண்டும் பெறுவதற்குத் துபாய் சர்வதேச விமான நிலையத்திலும் நகரம் முழுவதும் உள்ள விரிவான அமைப்புகள் எவ்வாறு உதவுகின்றன என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel