அபுதாபியில் வசிக்கும் இந்தியர் ஒருவர், வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள்ளேயே 2 மில்லியன் திர்ஹம் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.
ஷார்ஜா இஸ்லாமிக் வங்கியின் (SIB) ‘மில்லியனர்’ (Millionaire) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வங்கியின் தலைமை கிளையில் நடைபெற்ற டிராவில், 34 வயதான ஷாஜீர் வெங்கா (Shajeer Venga) அந்தப் பிரம்மாண்டமான பரிசை வென்று அதிர்ஷ்டசாலியானார்.
ஷாஜீர் சில வாரங்களுக்கு முன்புதான் SIB டிஜிட்டல் செயலி (App) மூலம் தனது கணக்கைத் தொடங்கியிருந்தார். பல பங்கேற்பாளர்களைப் போலவே அவரும் வெற்றிபெறும் நம்பிக்கையில் இதில் இணைந்துள்ளார். ஆனால், தனது வாழ்க்கையையே மாற்றியமைக்கும் அந்தத் தருணம் இவ்வளவு விரைவாக வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சாரத்தைக் கவனித்து வந்ததாகவும், முந்தைய வெற்றியாளர்களின் கதைகளைப் படிக்கும்போதெல்லாம் ஒரு நாள் தனது பெயரும் அறிவிக்கப்படுவதை கற்பனை செய்து பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
“இந்த 2 மில்லியன் திர்ஹம் பரிசு என் வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகிறது,” என்று கூறிய ஷாஜீர், பரிசுத் தொகையை எதிர்காலத்திற்காக முதலீடு செய்யவுள்ளதாகவும், அமீரகத்தில் வசிக்க வைக்கத திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது வெற்றியைப் பற்றிக் குறிப்பிடுகையில், “ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது; ஒரு காலத்தில் வெறும் கனவாக இருந்ததை அது நிஜமாக்கியுள்ளது.” என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தச் சமீபத்திய டிரா மற்ற பல வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த பரிசுகளை வழங்கியுள்ளது. அமீரகத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் மோசா புட்டி (Moza Butti) ஒரு ஆடம்பரமான BMW XM காரை வென்றார், அதே சமயம் மேலும் 40 பங்கேற்பாளர்கள் ரொக்கப் பரிசுகளைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய ஷார்ஜா இஸ்லாமிக் வங்கியின் சில்லறை வங்கிச் சேவைப் பிரிவின் (Retail Banking) தலைவர் நபில் அபு அல்வான் (Nabil Abou Alwan), ‘மில்லியனர்’ பிரச்சாரமானது வாடிக்கையாளர்களைச் சேமிக்க ஊக்குவிப்பதையும் தாண்டி பல நோக்கங்களைக் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
“வாடிக்கையாளர்கள் தங்கள் லட்சியங்களை அடையவும், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்குவதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்று கூறியதுடன், “ஷாஜீரின் கனவை நனவாக்குவதில் நாங்கள் ஒரு பங்காற்றியதில் பெருமை கொள்கிறோம்.” என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த டிராவில் தலா 1 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள இரண்டு பிரம்மாண்டமான பரிசுகள் (ஒன்று ஐக்கிய அரபு அமீரகக் குடிமக்களுக்கு மட்டுமே, மற்றொன்று அனைத்து நாட்டினருக்கும் பொதுவானது) மற்றும் கூடுதலாக 40 ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel