திங்களன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளின் சில இடங்களில் மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததைத் தொடர்ந்து, நாட்டில் மீண்டும் ஒரு நாள் கோடைக்கால மழை பெய்யவுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது. அமீரகத்தின் மலைப்பகுதிகளைத் தாண்டி வெப்பச்சலன மேகங்கள் (convective clouds) பரவுவதால், மேலும் மழை, பலத்த காற்று மற்றும் புழுதிப் புயல் வீசக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
ஹஜர் மலைத்தொடரின் மீது வெப்பச்சலன மேகங்கள் உருவானதால், திங்கள்கிழமை மதியம் ஃபுஜைரா மற்றும் ராஸ் அல் கைமா எல்லைப் பகுதியான மசாஃபியில் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இந்த மழையால் கிழக்குப் பகுதியில் தற்காலிக நிம்மதி உருவாகினாலும், துபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் வெப்பமான மற்றும் வெயில் நிறைந்த வானிலையே நிலவியதாகக் கூறப்படுகிறது.
இந்த உள்ளூர் மழைப்பொழிவு, NCM வெளியிட்ட முன்னறிவிப்புகளுடன் ஒத்துப்போனது. அதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என்றும், மற்ற இடங்களில் வானம் தெளிவாகவோ அல்லது ஓரளவு மேகமூட்டத்துடனோ காணப்படும் என்றும் மையம் கணித்திருந்தது.
தற்போது வானிலை ஆய்வு மையம் மேலும் ஒரு நாள் நிலையற்ற வானிலை நிலவும் என்று கணித்துள்ளது. அதன்படி, கிழக்கு மலைப்பகுதிகளிலிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கு வெப்பச்சலன மேகங்கள் பரவி, மேலும் மழைக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NCM-இன் கூற்றுப்படி, கிழக்கிலிருந்து பரவும் தரைமட்ட குறைந்த காற்றழுத்த மண்டலத்தின் நீட்சியும், அதற்குத் துணையாக வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் உள்ள குறைந்த காற்றழுத்த மண்டலமும் இந்த வானிலை மாற்றத்திற்குக் காரணமாக உள்ளன.
வெப்பநிலையைப் பொறுத்தவரை, உள்நாட்டுப் பகுதிகளில் 43°C முதல் 48°C வரையிலும், கடற்கரை மற்றும் தீவுப் பகுதிகளில் 37°C முதல் 42°C வரையிலும், மலைப்பகுதிகளில் 31°C முதல் 37°C வரையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வீசக்கூடிய காற்றின் வேகம் லேசானது முதல் மிதமானதாக இருக்கும் என்று கோரப்பட்டுள்ளது. இருப்பினும், குறிப்பாக உள்நாட்டு மற்றும் மலைப்பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்றாக மாறி, மணிக்கு 45 கி.மீ வேகம் வரை எட்டக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றினால் புழுதி மற்றும் மணல் கிளம்பக்கூடும் என்பதால் திறந்தவெளிகளில் பார்வைத்திறன் குறையலாம். அதேவேளையில், அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் நிலை அமைதியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மட்டுமின்றி, வரவிருக்கும் நாட்களிலும் நிலையற்ற வானிலை தொடரும் என்று NCM தெரிவித்துள்ளது. சனிக்கிழமை வரை நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் வெப்பச்சலன மேகங்கள் உருவாகி, மதிய வேளையில் மழைக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை முதல் வெப்பநிலை சற்று உயரக்கூடும் என்றாலும், அவ்வப்போது பலத்த காற்று வீசுவது தொடரும் என்று கூறியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வழக்கமான கோடைக்கால வானிலை அமைப்பின் ஒரு பகுதியாக இந்த மழைப்பொழிவு உள்ளது.
சனிக்கிழமையன்று ஷார்ஜாவில் உள்ள அல் தைத் மற்றும் சுஹைலா பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து இந்த சமீபத்திய மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதி முழுவதும் இதேபோன்ற வெப்பச்சலன மேகச் செயல்பாடு உருவானதைத் தொடர்ந்து, அன்று கடுமையான மழைப்பொழிவு பதிவானதுடன், ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடின.
பாதுகாப்பு அறிவுரை
இவ்வாறு நாட்டில் நிலையற்ற வானிலை நிலவும்போது, அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும், வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் தேசிய வானிலை மையம் (NCM) குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது.
மழை பெய்யும்போது வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை ஓட்டவும், திடீர் வெள்ளம் மற்றும் நீர் தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளைத் தவிர்க்கவும், இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது திறந்த அல்லது உயரமான இடங்களைத் தவிர்க்கவும், மேலும் பார்வைக் குறைவை ஏற்படுத்தி, தளர்வான பொருட்களை இடம்பெயரச் செய்யக்கூடிய வலுவான கீழ்நோக்கிய காற்றுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் வானிலை தொடர்ந்து மாறிவருவதால், ஆலங்கட்டி மழை பெய்யும் பட்சத்தில் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்புகளைக் கண்காணிக்குமாறும் அந்த ஆணையம் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel