துபாயில் மெட்ரோ நிலையங்களுக்கும் அலுவலகங்கள், வீடுகள் மற்றும் வணிகப் பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் புதிய மின்சாரப் பேருந்து சேவையை குறிப்பிட்ட பகுதியில் துபாய் தொடங்கியுள்ளது. இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதால், ஜுமைரா லேக்ஸ் டவர்ஸ் (JLT) பகுதியில் பயணம் செய்வது எளிதாகியுள்ளது. ‘JLT Link’ எனப்படும் இந்தச் சேவை, ‘கடைசி மைல் இணைப்பு’ (last-mile connectivity) வசதியை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜுமைரா லேக்ஸ் டவர்ஸ் (JLT) பகுதி முழுவதும் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களை ‘Sobha Realty’ மற்றும் DMCC மெட்ரோ நிலையங்களுடன் இணைக்கும் இச்சேவை சனிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. JLT-க்குள் மெட்ரோ நிலையங்களுக்கும் அலுவலகங்கள், வீடுகள் மற்றும் பிற இடங்களுக்கும் இடையிலான நடை தூரத்தைக் குறைப்பதன் மூலம் பயணத்தை எளிதாக்குவதே இதன் நோக்கமாகும்.
இப்பேருந்துகள் இரண்டு வட்டப் பாதைகளில் (circular routes) இயக்கப்படுகின்றன.
- Loop 1 : DMCC மெட்ரோ நிலையத்தை, JLT-யின் மேற்குப் பகுதியில் உள்ள Cluster A முதல் N வரையிலான பகுதிகளுடன் இணைக்கிறது.
- Loop 2 : Sobha Realty மெட்ரோ நிலையத்தை, Cluster O முதல் Z வரையிலான பகுதிகளுடன் இணைக்கிறது. இது இப்பகுதியின் கிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக இடங்களை உள்ளடக்கியது.
இப்பேருந்துகள் JLT முழுவதும் உள்ள ஏற்கனவே உள்ள RTA பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் பாதுகாப்பாக ஏறவும் இறங்கவும் ஒவ்வொரு நிறுத்தத்திலும் போதுமான நேரம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகப் போக்குவரத்து உள்ள நேரங்களைப் பொறுத்து, ஒரு முழு வட்டப் பயணத்தை (loop) முடிக்க 10 முதல் 22 நிமிடங்கள் வரை ஆகும் என்று சேவை வழங்குநர் தெரிவித்துள்ளார்.
வழக்கமான கட்டணம் ஒரு பயணத்திற்கு 3 திர்ஹம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முதல் நாளில் பயணம் செய்தவர்கள், அறிமுக வார இறுதியில் இலவசப் பயணம் வழங்கப்பட்டதாகவும், திங்கட்கிழமை முதல் வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு முன் பணம் செலுத்துவதற்கான குறியீட்டை (payment code) ஸ்கேன் செய்வதன் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம்.
இப்பேருந்துகள் 20 முதல் 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மெட்ரோ நிலையங்களுக்கும் ஜுமைரா லேக்ஸ் டவர்ஸ் பகுதி முழுவதும் உள்ள பல்வேறு வளாகங்களுக்கும் இடையே பயணிக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு நம்பகமான போக்குவரத்து வசதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவதற்கும், மின்சாரப் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட நிலையான போக்குவரத்துத் தீர்வுகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் துபாய் மேற்கொண்டு வரும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த புதிய சேவை அமைந்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel