அமீரகத்தை பொறுத்தவரை தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தனியார் துறை நிறுவனங்களில் தொழிலாளர் விதிமீறல்கள் 15 சதவீதம் குறைந்துள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உரிய அனுமதியின்றி தொழிலாளர்களைப் பணியமர்த்துதல், ஊதியப் பாதுகாப்பு அமைப்பு (WPS) மூலம் ஊதியம் வழங்கத் தவறுதல் மற்றும் தவறான தரவு அல்லது ஆவணங்களைச் சமர்ப்பித்தல் ஆகியவை ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட பொதுவான விதிமீறல்களாகத் தொடர்ந்து நீடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தனியார் துறை நிறுவனங்கள் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கு அல்லது வேலைக்குச் சேர்ப்பதற்கு முன் அனைத்துத் தேவையான அனுமதிகளையும் ஒப்புதல்களையும் பெற வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் WPS மூலம் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (Mohre) வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் முறையான அனுமதியின்றி ஒரு தொழிலாளரைப் பணியமர்த்துவது, ஐக்கிய அரபு அமீரகத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் 100,000 திர்ஹம் முதல் 1 மில்லியன் திர்ஹம் வரையிலான அபராதங்களுக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வந்து வேலை வழங்கத் தவறும் அல்லது பணி அனுமதிகளைத் தவறாகப் பயன்படுத்தும் முதலாளிகளுக்கும் இதே அளவிலான அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வந்த விதிகளுக்கு உட்பட்டே ஊதியம் வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் புதுப்பிக்கப்பட்ட WPS-இன் படி, முந்தைய மாதத்திற்கான ஊதியம் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலேயே வழங்கப்பட வேண்டும். மேலும் ஊதியம் வழங்கத் தவறும் நிறுவனங்களுக்குக் காலக்கெடு முடிந்த மறுநாளே (இரண்டாம் நாள்) எச்சரிக்கைகள் அனுப்பப்படும்; ஊதியம் வழங்கப்படாவிட்டால் ஐந்தாம் நாளிலிருந்து புதிய பணி அனுமதிகளை வழங்குவது இடைநிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாமல் தவறான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது ஒரு நிறுவனம் பணி அனுமதிகளைப் பெறும் திறனையும் பாதிக்கலாம். ஒரு நிறுவனம் தவறான ஆவணங்களை வழங்கினால், பணி அனுமதிகளை வழங்குவதையோ அல்லது புதுப்பிப்பதையோ அமைச்சகம் (Mohre) மறுக்கலாம் அல்லது அவற்றை ரத்து செய்யலாம் என்று அதிகாரப்பூர்வ அரசு வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன. இதே போன்றே WPS அல்லது பிற தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இணங்கத் தவறும் நிறுவனங்கள் மீதும் இதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொழிலாளர் சந்தை சட்டங்களை மீறிய தனியார் துறை நிறுவனங்களின் எண்ணிக்கையில் 15 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் (Mohre) தெரிவித்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று பொது வழக்கு துறை அலுவலகத்திற்கு (Public Prosecution) அனுப்பப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 962-ஆக இருந்த வழக்குகள், 49 சதவீதம் குறைந்து 490-ஆகக் குறைந்துள்ளன. நீதித்துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய தீவிர விதிமீறல்கள் குறைந்துள்ளதையே இது காட்டுவதாக அமைச்சகம் கூறியது.
அதிக ஆபத்துள்ள நிறுவனங்கள் மற்றும் செயல்பாடுகள் மீது ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட “ஸ்மார்ட் கண்காணிப்பு அமைப்பின்” (smart monitoring system) ஒரு பகுதியாக, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 212,000 ஆய்வுகளைத் தங்கள் ஆய்வுக் குழுக்கள் மேற்கொண்டதாக அமைச்சகம் (Mohre) தெரிவித்துள்ளது. முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நிறுவனங்களையும் வழக்குகளையும் ஆய்வாளர்கள் அடையாளம் காண உதவுவதற்காக, இந்த அமைப்பு செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு மற்றும் இடர் குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தனது ஆய்வு மற்றும் இணக்க அமைப்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதாகவும், தொழிலாளர் சட்டங்களுக்குத் தடுப்புமுறையில் இணங்குவதை ஊக்குவிக்கவும், பாதுகாப்பான, நிலையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த பணிச்சூழலை ஆதரிக்கவும் முதலாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.