ADVERTISEMENT

பராமரிப்பு பணிக்காக மூடப்படும் துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுதளம்.. விமான நிலையம் அறிவிப்பு..!!

Published: 22 Mar 2022, 4:30 PM |
Updated: 22 Mar 2022, 4:53 PM |
Posted By: admin

உலகின் மிகவும் பரபரப்பான மற்றும் அதிகளவிலான பயணிகளை கையாள்வதில் உலகளவில் முதலிடம் வகிக்கும் துபாயின் சர்வதேச விமான நிலையம், பராமரிப்பு பணிக்காக அதன் இரண்டு ஓடுபாதைகளில் ஒன்றை தற்காலிகமாக மூடவுள்ளதாக அறிவித்துள்ளது. கோடை காலத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த பராமரிப்பு பணியானது வரும் மே மாதம் தொடங்கி 45 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் துபாய் விமான நிலைய ஆபரேட்டர் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் துபாய் விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதையின் பணிநிறுத்தம் பாதுகாப்பு மற்றும் திறமையான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக, விமான நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மே 9 அன்று தொடங்கி ஜூன் 22 வரை நீடிக்கும் என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தாமதங்கள் மற்றும் இடையூறுகளை குறைக்க, ஒரு சில விமான நிறுவனங்களின் விமானங்கள் துபாயின் இரண்டாவது விமான நிலையமான துபாய் வேர்ல்ட் சென்ட்ரலில் உள்ள அல் மக்தூம் இன்டர்நேஷனல் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் விமான இயக்கங்களை குறைக்கவும், அதற்கேற்ப திட்டமிடவும் அனைத்து விமான நிறுவனங்களையும் அறிவுறுத்தியிருப்பதாகவும் விமான நிலைய ஆபரேட்டர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பராமரிப்பு பணிக்காக தற்போது மூடப்படவிருக்கும் இந்த வடக்கு ஓடுபாதை இதற்கு முன்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு விரிவான பழுதுபார்ப்புகளுக்காக மூடப்பட்டது. அதே நேரத்தில் தெற்கு ஓடுபாதையானது கடந்த 2019 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது