ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு அரசு துறைக்கு 9 நாட்கள் விடுமுறையும் தனியார் துறைக்கு பிறை பார்ப்பதை பொறுத்து 4 அல்லது 5 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வாகன ஓட்டிகள் துபாயில் இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.
அதன்படி வரும் ஏப்ரல் 30 முதல் மே 6, 2022 வரை இந்த பார்க்கிங் கட்டணம் (பல அடுக்கு பார்க்கிங் தவிர) இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின் மே 7 முதல் பார்க்கிங் கட்டணம் மீண்டும் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள், கட்டண வாகன நிறுத்துமிடங்கள், பொதுப் பேருந்துகள், துபாய் மெட்ரோ மற்றும் டிராம், கடல்வழி போக்குவரத்து வழிமுறைகள் மற்றும் சேவை வழங்குநர் மையங்கள் (தொழில்நுட்ப சோதனை) உட்பட இந்த ஆண்டு கிடைக்கும் நீண்ட ஈத் அல் பித்ர் விடுமுறையின் போது RTA தனது அனைத்து பொது போக்குவரத்து சேவைகளின் வணிக நேர மாற்றங்களையும் அறிவித்திருக்கின்றது.
வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி மையங்கள் ஏப்ரல் 30 முதல் மே 8 வரை மூடப்படும் என்றும் மே 9, 2022 அன்று அவை மீண்டும் பணியைத் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சேவை வழங்குநர் மையங்கள் (தொழில்நுட்ப சோதனை) ஏப்ரல் 30 முதல் மே 7 வரை மூடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.