அமீரகத்தில் ஈத் விடுமுறை ஆரம்பித்ததை தொடர்ந்து அமீரகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 30 முதல் மே 9 வரையிலான நாட்களில் மட்டுமே 1.9 மில்லியன் பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கவுள்ளனர். இதனால் இந்த விடுமுறை நாட்களில் துபாய் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இயக்குநர் ஜெனரலும், நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டர் அல் தாயர், ஈத் விடுமுறையின் போது துபாயில் போக்குவரத்து மேலாண்மைக்கான தயார்நிலை மற்றும் செயல்பாட்டுத் திட்டங்கள் குறித்து விவாதிக்க RTA இல் நெருக்கடி மேலாண்மைக் குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. விடுமுறை நாட்களில் விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகளில் (டெர்மினல்கள் 1 மற்றும் 3) கடுமையான போக்குவரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் போது, தாமதத்தைத் தவிர்ப்பதற்காக நான்கு மணி நேரத்திற்கு முன்னதாகவே புறப்படுவதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதே போன்று கூட்ட நெரிசல் காரணமாக விமான நிலையத்தின் புறப்படும் பகுதியில் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீட்டில் இருந்தே விடைபெற்றுக் கொள்வது உகந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.