UAE: பாஸ்போர்ட் புதுப்பித்தல் சம்பந்தமாக புதிய அறிவிப்பை வெளியிட்ட இந்திய துணை தூதரகம்..!
துபாயில் உள்ள இந்தியர்கள் ‘தட்கல்’ சேவையின் மூலம் அவசரகால பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் சுஞ்சய் சுதிர் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான அவசரத்தை எதிர்கொள்ள துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் நடத்திய சிறப்பு முகாமில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமீரகத்திற்கான இந்திய தூதர் சுஞ்சய் சுதிர் தெரிவிக்கையில், “கடந்த மாதம் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் சுமார் 2,000 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. அவசரகால பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான ‘தட்கல்’ விண்ணப்பங்கள், கைமுறையாக அல்லது கூரியர் மூலமாக ஒரு நாளில் செயலாக்கப்பட்டு டெலிவரி செய்யப்படும். பாஸ்போர்ட்டை வழங்குவதற்கு முன் போலீஸ் சரிபார்ப்பு இல்லாத நிலையில், தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே ‘தட்கல்’ பிரிவின் கீழ் அனுமதிக்கப்படும். அவசர பயணத் தேவைகள், குறிப்பாக மருத்துவ அவசர நிலைகள் அல்லது குடும்பத்தில் மரணம் காரணமாக, பரிசீலிக்கப்படும். BLS International Visa and Passport Services மையத்தில் அனைத்து நாட்களிலும் ‘தட்கல்’ விண்ணப்பங்களுக்கான முகாம் நடைபெறுகிறது. இது துபாயில் உள்ள மையங்களில் தொடங்கி மற்ற எமிரேட்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.
விசா புதுப்பித்தல், புதிய வேலைக்கு விண்ணப்பித்தல், கல்வி நோக்கங்களுக்காக என்ஆர்ஐ சான்றிதழ்கள் பெறுதல், காவல்துறை அனுமதிச் சான்றிதழ்கள் போன்றவற்றுக்கு பாஸ்போர்ட் புதுப்பித்தல் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக பயிற்சி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.