வரும் 2023 முதல், துபாயில் 11 புதிய குடியிருப்புப் பகுதிகளில் இ-ஸ்கூட்டர்களை இயக்கலாம் என துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இஸ்கூட்டர்கள் அனுமதிக்கப்பட்ட மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கையானது 21 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பைக்குகள், இ-ஸ்கூட்டர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாதைகளின் மொத்த நீளம் 185 கிமீட்டரில் இருந்து 390 கிமீ ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பகுதிகள்:
>> அல் தவார் 1
>> அல் தவார் 2
>> உம்மு சுகீம் 3
>> அல் கர்ஹூத்
>> முஹைஸ்னா 3
>> உம்மு ஹுரைர் 1
>> அல் சஃபா 2
>> அல் பர்ஷா சவுத் 2
>> அல் பர்ஷா 3
>> அல் கூஸ் 4
>> நாத் அல் ஷெபா 1
இந்த பாதைகளானது முக்கிய இடங்களான, 10 முக்கிய போக்குவரத்து நிலையங்கள், பொது பூங்காக்கள் மற்றும் வணிக விற்பனை நிலையங்கள் போன்ற 18 முக்கிய இடங்களை இணைக்கின்றன.
RTAவின் இயக்குநர் ஜெனரலும், நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டர் அல் தாயர் கூறுகையில், “அந்தப் பகுதிகளில் போக்குவரத்துப் பாதுகாப்பின் சிறந்த தரநிலைகளுக்கு ஏற்ப பாதைகளை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களின் பாதுகாப்பிற்காக வேக வரம்பானது 40 -ல் இருந்து 30 கிமீ ஆக குறைத்து, திசைக் குறியீடுகள் மற்றும் உள் சாலைகளை பாதுகாப்பான பகுதிகளாக மாற்றுவது உள்ளிட்ட மேம்பாடுகள் அந்த இடங்களில் தற்போது நடைபெற்று வருகின்றன” என தெரிவித்துள்ளார்.