UAE: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்து..!! தற்காலிக தங்குமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 380 பேர்..!!
அஜ்மானில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட தீவிபத்தினால் அந்த கட்டிடத்தில் இருக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் பாதுகாப்புக் குழுவினரால் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அங்கு வசிக்கும் 380 பேரும் தற்காலிக தங்குமிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அஜ்மான் போக்குவரத்து ஆணையம் (ATA) இது குறித்து தெரிவிக்கையில், சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வாடகைதாரர்களையும் பாதுகாப்பாக இடமாற்றம் செய்வதை உறுதி செய்வதற்காக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.
அல் ரஷிதியா 1 இல் உள்ள குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் ஒன்பது பேருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அதே நேரத்தில் இருவர் தீக்காயங்களுக்கு ஆளானதாகவும் அஜ்மான் காவல்துறை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஷேக் கலீஃபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.
ATA ஆல் பகிரப்பட்ட ஒரு சமூக ஊடக இடுகையில், அதிகாரத்தின் இயக்குநர் ஜெனரல் உமர் முகமது லோதா, குடியிருப்பாளர்களின் போக்குவரத்தின் போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தீயை அணைப்பதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அஜ்மான் எமிரேட்டின் அவசரகால பதில் குழுக்களின் முயற்சிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.