UAE: வந்திறங்கும் பயணிகளை கையாளுவதில் உலகின் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்ட அபுதாபி சர்வதேச விமான நிலையம்..!!
ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (Airports Council International) நடத்தும் வருடாந்திர விமான நிலைய சேவை தர விருதுகளின்படி (Airport Service Quality Awards) அபுதாபி சர்வதேச விமான நிலையம், வந்திறங்கும் பயணிகளை கையாளுவதில் உலகின் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமும் பயணிகளின் அனுபவத்திற்கான உலகின் சிறந்த விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலானது பயணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏர்போர்ட் கவுன்சில் தெரிவித்துள்ளது. அதாவது விமான நிலையங்களில் இருந்து புறப்படும் மற்றும் வந்திறங்கும் பயணிகளின் அனுபவம் மற்றும் பயணிகளின் ஒட்டுமொத்த திருப்தியின் அளவுகளைக் கண்காணிக்கும் நேரடி ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த விருதுகள் குறித்து அபுதாபி விமான நிலையத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான ஜமால் சலேம் அல் தாஹேரி அவர்கள் கூறுகையில், அபுதாபி விமான நிலையத்தில் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்க கடமைப்பட்டுள்ளதாகவும், இந்த விருது விமான நிலையக் குழுவின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலகளவில் மிகவும் பிரபலமான சில பெரிய விமான நிலையங்களில் ரோம்-ஃபியூமிசினோ சர்வதேச விமான நிலையம் உள்ளது, இது ஒட்டுமொத்த தரம், அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் மற்றும் தூய்மைக்கான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அதுபோல, சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அதன் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுக்காகவும், பயணிகளின் வசதிக்காகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 முதல் 15 மில்லியன் பயணிகளைக் கையாளும் சிறந்த விமான நிலையம் மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மிகவும் மகிழ்ச்சிகரமான பயண அனுபவத்தை தரும் விமான நிலையம் உட்பட ஆறு பிரிவுகளில் ஐந்து விருதுகளை இந்தோனேசியாவின் சுல்தான் ஹசானுதீன் சர்வதேச விமான நிலையம் வென்றதன் மூலம் சிறிய விமான நிலையங்களும் இந்த பட்டியலில் இணைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட பயணிகளின் கூற்றுப்படி, உலகின் சிறந்த பெரிய விமான நிலையம் வருடத்திற்கு 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் மையமாக கணக்கிடப்படுகிறது, வாடிக்கையாளர் சேவைக்காக மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் இந்தியாவிலிருந்து இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் உட்பட, GCC முழுவதும் உள்ள சில பெரிய விமான நிலையங்கள் இந்த விருதுகள் பட்டியலில் இடம்பெறவில்லை. அதற்கு காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல விமான நிலையங்கள் அதிகமான பயணிகளைக் கையாள முடிந்தாலும், அந்த பிராந்தியத்திற்கான தரவரிசைகள் வருடத்திற்கு 25 மில்லியன் பயணிகளைக் கையாளும் விமான நிலையங்களை அடிப்படையாக கொண்டு பட்டியலிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.