ஓமானில் நாளை துவங்கும் ரமலான்.. அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கான வேலை நேரங்கள் அறிவிப்பு..!!
ஓமானில் இன்று பிறை பார்க்கும் கமிட்டியானது ரமலான் மாதம் நாளை (மார்ச் 23) துவங்கவிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ஓமானில் நாளை ரமலான் மாதத்தின் முதல் நாளாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாதத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ வேலை நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஓமன் செய்தி நிறுவனம் (ONA) தெரிவித்துள்ளது.
தொழிலாளர் அமைச்சகம் (MoL) அறிவித்துள்ள வேலை நேரங்களின் விவரங்கள் பின்வருமாறு:
1. அரசு ஊழியர்களுக்கான பணி நேரங்கள்:
உத்தியோகபூர்வ வேலை நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையாகும். இருந்தபோதிலும் அந்தந்த நிர்வாகங்களின் தலைவர்கள் திட்டமிடப்பட்ட வேலை நேரத்தினை தங்களுக்கு ஏற்றவாறு தீர்மானிக்கலாம். அவை
- காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை
- காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
- காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை
தொலைதூர வேலை முறை:
பிரிவின் தலைவர், அந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு பாரபட்சமின்றி, அவர்களின் வேலை முறைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனில் தொலைதூர வேலையைச் செயல்படுத்த அனுமதிக்கலாம்.
2. தனியார் துறை நிறுவனங்கள்
தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் முஸ்லீம் தொழிலாளர்களின் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 6 மணிநேரமாக குறைக்க வேண்டும். இது வாரத்திற்கு 30 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.