ADVERTISEMENT

சவூதியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவருக்கு நேர்ந்த சோகம்..!! பேருந்தில் இருந்து இறங்கும் போது வாகனம் மோதியதில் பரிதாபமாக பலி….

Published: 3 Oct 2023, 5:19 PM |
Updated: 3 Oct 2023, 5:53 PM |
Posted By: Menaka

கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) அன்று, சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் பள்ளி பேருந்தில் இருந்து இறங்கிய மாணவர் மீது வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த விபத்துத் தொடர்பான தகவல்களை தெரிவித்த கிழக்கு மாகாணக் கல்வியின் (Eastern Province Education) செய்தித் தொடர்பாளரான சயீத் அல்-பாஸ் என்பவர், பரா பின் அஹம்மது அபு ஷகாப் (Baraa bin Ahmed Abu Shaqaf) என்ற மாணவர் பள்ளி முடிந்து வீடு திரும்புகையில், கல்வி போக்குவரத்துக்கான மேம்பாட்டு நிறுவனம் வழங்கிய பள்ளி பேருந்தில் இருந்து இறங்கிய போது விபத்துக்குள்ளானதாகக் கூறியுள்ளார்.

வழக்கம் போல பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவருக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தால் அகால மரணமடைந்ததாகவும் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தின் கல்வி பொது நிர்வாகம் (General Administration of Education), குறிப்பாக பள்ளி பாதுகாப்பு நிர்வாகம், இத்தகைய துன்பகரமான நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஏற்கனவே நிறுவப்பட்ட விதிமுறைகளை விடாமுயற்சியுடன் கடைப்பிடித்து வருவதாக சயீத் அல்-பாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாணவரின் மரணத்திற்கு இரங்கலை தெரிவித்த கிழக்கு மாகாண கல்விப் பொதுநிர்வாகம், குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சவுதியின் மேற்கு தம்மாம் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள அபுதாவூத் தொடக்கப் பள்ளியில் பயின்று வந்த இளம் மாணவரின் உயிரிழப்பால் கிழக்கு மாகாண கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகவும், அத்துடன் அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் வலிமை மற்றும் ஆறுதலுக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..