கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குவைத் அரசாங்கம் அமல்படுத்தியிருந்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவானது வரும் ஆகஸ்ட் 30 ம் தேதியுடன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் குவைத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர், ஜூலை மாதத்தில் அந்நாட்டில் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்புவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக ஒன்பது மணி நேர ஊரடங்கானது ஆறு மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
இருப்பினும், பொது மற்றும் தனியார் இடங்களில் திருமண விருந்துகள், வரவேற்புகள் மற்றும் துக்க விழாக்கள் உள்ளிட்ட பெரிய கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையானது நீடிக்கும் என்றும் குவைத் அரசாங்கம் தெரிவித்திருந்துள்ளது.
குவைத் நாட்டில் இதுவரை மொத்தம் 78,500 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.