ஓமான் நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை தொடர்ந்து தற்போது மேலும் பல இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து கனமழை பெய்துவரும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சிவில் பாதுகாப்பு அமைச்சகம் பொதுமக்கள் அனைவரையும் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது பெய்துள்ள மழையின் காரணமாக ஓமானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அல் புரைமி, அல் தஹிரா, வடக்கு அல் ஷர்கியா, அல் தகிலியா, மற்றும் தெற்கு அல் பதினா ஆகிய பகுதிகளில் மிதமானது மழை முதல் கனமான மழை வரை பதிவாகி இருப்பதாகவும் இதனால் அப்பகுதிகள் மற்றும் சாலைகளில் பெருமளவில் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள ஓமானின் சிவில் பாதுகாப்புக்கான பொது ஆணையம் (Public Authority for Civil Defence) பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பள்ளத்தாக்குகளை கடக்கும் ஆபத்தான முயற்சியில் இறங்க வேண்டாம் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் பள்ளத்தாக்குகளை கடக்கும் போது வாகனங்கள் சறுக்க வாய்ப்பிருப்பதாகவும், இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதனால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் சிவில் பாதுகாப்பு ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.