துபாயில் 45 நாட்கள் நடைபெறும் “புதுமையான ட்ரோன் லைட் ஷோ”..!! துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலை சிறப்பாக்க புதிய நிகழ்ச்சி..!!
உலகளவில் புகழ்பெற்ற “துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2020” (DSF) இந்த மாதம் 17 ஆம் தேதி தொடங்கி பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் புரோமோஷன்களுடன் நடைபெற்று வருகிறது. தற்போது அதன் சிறப்பம்சத்தை மேலும் சிறப்பாக்கும் விதமாக வாடிக்கையாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் விருந்தளிக்கும் வண்ணம் ட்ரோன்களை கொண்டு இருண்ட வானத்தில் ஒரு புதிய லைட் ஷோ ஒன்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நடக்கும் 45 நாட்களும் இந்த புதிய லைட் ஷோ நடைபெறும் எனவும், ஒரு நாளில் இரண்டு முறை ட்ரோன்களை கொண்டு காட்சிப்படுத்தப்படும் இந்த புதிய நிகழ்ச்சி, பார்வையாளர்களை மிகவும் கவரும் எனவும் ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“புளூவாட்டர்ஸ் ஐலேண்ட்” மற்றும் ஜேபிஆருக்கு (JBR) எதிரே இருக்கும் “தி பீச்” ஆகியவை இந்த புதுமையான “துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் ட்ரோன் லைட் ஷோவை” நடத்துகின்றன. மேலும் இதனை பார்வையாளர்கள் அனைவரும் இலவசமாக கண்டுகளிக்க முடியும் என்பதும் சிறப்புக்குரியது.
இருண்ட வானத்தின் நடுவே ஒவ்வொரு இரவும் நடைபெறும் இந்த “துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் ட்ரோன் லைட் ஷோ” பார்வையாளர்களுக்கு திகைப்பூட்டும் மற்றும் மகிழ்ச்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ட்ரோன் லைட் ஷோவின் முதல் காட்சி தினமும் இரவு 7 மணிக்கும் மற்றும் இரண்டாவது காட்சி இரவு 9.30 மணிக்கும் தொடங்கும்.
தினமும் நடைபெறும் இரு நிகழ்ச்சிகளும் “துபாய், எ சிட்டி ஆஃப் அட்வென்ச்சர் (A City of Adventure)” என்ற கருவின் அடிப்படையிலும், துபாயின் வளர்ச்சியை கொண்டாடும் வகையில் “கடந்த காலத்திலிருந்து தற்போது வரை (From the Past to the Present)” என்ற கருவின் அடிப்படையிலும் இந்த துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் ட்ரோன் லைட் ஷோ நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.