சவுதி அரேபியாவில் திங்கள்கிழமை அதிகாலை மக்காவிலிருந்து மதீனாவுக்கு இந்திய உம்ரா வழிபாட்டாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து டீசல் டேங்கர் லாரியுடன் மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த பேரழிவு விபத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதல் கட்ட அறிக்கைகளின் படி, மதீனாவிலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள முஹ்ராஸ்/முஃப்ரிஹாத் அருகே நடந்த இந்த விபத்தில் பல பயணிகள் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் இறந்தவர்களில் 11 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் இருக்கலாம் என்று சில அறிக்கைகள் கூறுகின்றன, இருப்பினும் பெரும்பாலான பயணிகள் சிக்கிய பேருந்து கடுமையாக எரிந்ததால் அடையாளங்களை உறுதிப்படுத்த அதிகாரிகள் இன்னும் பணியாற்றி வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து, ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை அமைத்து, தகவல் மற்றும் உதவிக்கு குடும்பங்கள் கட்டணமில்லா எண் 8002440003 ஐ தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
தெலுங்கானா அரசு நடவடிக்கை
மேலும், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தெலுங்கானா அரசு ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளது. புது தில்லியில் உள்ள அதிகாரிகளுக்கு, தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும், பேருந்தில் எத்தனை நபர்கள் இருந்தனர் என்பது குறித்த முழுமையான விவரங்களை சேகரிக்கவும் அம்மாநில முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கூடுதலாக, மாநில செயலகத்தில் ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தொடர்பு கொள்ள எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Breaking:
— Global Report (@Globalrepport) November 17, 2025
A tragic bus crash near Medina, Saudi Arabia, claimed at least 42 Indian Umrah pilgrims, early Monday.
The vehicle, heading from Mecca to Madinah, slammed into a diesel tanker around 1:30 a.m. IST at Mufrihat, sparking a massive blaze that charred passengers asleep… pic.twitter.com/tYK73UtLej
நேரடி சாட்சிகள் கூறுவது என்ன?
இந்த விபத்து இந்திய நேரப்படி, அதிகாலை 1:30 மணியளவில் நிகழ்ந்திருக்கிறது, அப்போது பல பயணிகள் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. டேங்கர் லாரி மோதிய வேகத்தில் பேருந்து கிட்டத்தட்ட உடனடியாக தீப்பிடித்து எரிந்ததால், தப்பிக்க சிறிய கால அவகாசம் கூட இருந்திருக்காது என்றும் கூறுகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் வாகனம் முற்றிலும் கருகி இருப்பதைக் கண்டதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் சவாலான செயல்முறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவர் உயிர் பிழைத்ததாக நம்பப்படுகிறது, இருப்பினும் அவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இதனிடையே, அப்பகுதிக்கு விரைந்து சென்ற சவூதி சிவில் பாதுகாப்பு குழுக்களும் காவல்துறையினரும் மீட்புப் பணியை துரித்தப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் இந்திய தூதரக அதிகாரிகளும் உம்ரா நிறுவன பிரதிநிதிகளும் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கும் இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், 42 வழிபாட்டாளர்கள் பேருந்தில் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார், மேலும் இந்திய தூதரகத்தின் துணைத் தலைவருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் வீட்டிற்கு கொண்டு வரப்படுவதையும், காயமடைந்தவர்கள் யாராவது இருந்தால் முறையான மருத்துவ உதவி பெறுவதையும் உறுதி செய்யுமாறு மத்திய அரசை அவர் வலியுறுத்தியிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த துயரத்தின் போது துல்லியமான விபத்து தகவல்களைச் சேகரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆதரிக்கவும் இந்தியா மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அதிகாரிகள் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel