ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கான இலவச தடுப்பூசி பிரச்சாரம் ஆரம்பித்ததை முன்னிட்டு, தற்பொழுது வரை நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் எட்டு சதவீதம் பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) செவ்வாயன்று நடந்த அதிகாரப்பூர்வ செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஃபரிதா அல் ஹொசானி அவர்கள் கூறுகையில், அமீரகத்தில் இதுவரை 826,301 கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இது ஒரு நாளைக்கு 47,000 டோஸ்கள் வழங்கப்படுவதற்கு சமம் என்றும் தெரிவித்துள்ளார். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எட்டு சதவீதம் ஆகும்.
அவர் மேலும் கூறுகையில், “இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது நாட்டில் பொதுவாக கொரோனா நோய் தொற்றுக்களை குறைக்கவும், குறிப்பாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டவர்களை குறைக்கவும், அடுத்த கட்டத்தில் நோயை சிறப்பாக கட்டுப்படுத்தவும் உதவும்” என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் “நாட்டில் தற்சமயம் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன. அடுத்த கட்டத்தில் எங்கள் குறிக்கோள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதன் மூலமும், தடுப்பு நடவடிக்கைகளுக்கு சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் அர்ப்பணிப்பையும் வலியுறுத்துவதன் மூலமும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதாகும்” என்று டாக்டர் ஃபரிதா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு தடுப்பூசி பெறுவதற்கு முன்னுரிமை உண்டு என்று டாக்டர் ஃபரிதா வலியுறுத்தினார். “அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் இந்த பிரிவில் கவனம் செலுத்துகிறோம். இந்த தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு 100 சதவிகிதம் வெற்றிகரமான, பயனுள்ள மற்றும் பாதுகாப்பான தடுப்பூசி என நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த பிரிவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி பெற அறிவுறுத்துகிறோம்” என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
— NCEMA UAE (@NCEMAUAE) January 5, 2021