ADVERTISEMENT

ஜனவரியில் வரலாற்றிலேயே மிகவும் பரபரப்பான நாட்களைப் பதிவு செய்யும் DXB.. தினசரி 300,000க்கும் அதிகமானோர் பயணிப்பதாக தகவல்!!

Published: 5 Jan 2026, 2:55 PM |
Updated: 5 Jan 2026, 2:55 PM |
Posted By: Menaka

துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) தனது வரலாற்றிலேயே மிகவும் பரபரப்பான நாட்களைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 3 அன்று 324,000-க்கும் மேற்பட்ட பயணிகளும், அதைத் தொடர்ந்து ஜனவரி 4 அன்று 322,000-க்கும் மேற்பட்ட பயணிகளும் இந்த விமான நிலையம் வழியாகப் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தச் சாதனை அளவிலான புள்ளிவிவரங்கள், புத்தாண்டு உச்சக் காலகட்டத்தில் உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையம் வழியாக குடியிருப்பாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் டிரான்சிட் பயணிகள் பயணிப்பதால் ஏற்படும் விடுமுறைக்குப் பிந்தைய மாபெரும் பயண நெரிசலை எடுத்துக்காட்டுகின்றன.

ஜனவரி மாத பயண அதிகரிப்பு

ADVERTISEMENT

அந்தவகையில், ஜனவரி 1 முதல் ஜனவரி 11 வரை சுமார் 3.4 மில்லியன் பயணிகள் விமான நிலையம் வழியாகப் பயணிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக DXB தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தினசரி பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 300,000-ஐத் தாண்டி வருகிறது. அதிக அளவிலான பயணிகள் இருந்தபோதிலும், அனைத்து டெர்மினல்களிலும் சீரான செயல்பாடுகள், பயணிகளின் வசதி மற்றும் திறமையான போக்குவரத்தைப் பேணுவதில் கவனம் செலுத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பயணிகள் தங்கள் பயணம் முழுவதும் ஆதரவளிக்கப்பட்டதாக உணருவதையும், உச்சகட்ட நெரிசல் காலத்திலும் உயர் சேவைத் தரங்களைத் தொடர்ந்து அனுபவிப்பதையும் உறுதிசெய்ய குழுக்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றன என்பதையும் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் பயண ஆலோசனை

இந்நிலையில், துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் இதே காலகட்டத்தில் வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. நீண்ட வரிசைகளைத் தவிர்ப்பதற்காக, பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வருமாறும், DIFC அல்லது அஜ்மானில் உள்ள எமிரேட்ஸ் சிட்டி செக்-இன் போன்ற தொலைதூர செக்-இன் வசதிகளையும், அத்துடன் துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள ஹோம் செக்-இன் சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பயணிகளின் அதிகரிப்பால், டெர்மினல்களில் அதிக கூட்டம், இமிக்ரேஷன் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளில் நீண்ட வரிசைகள், மற்றும் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை பயணிகள் எதிர்கொள்ள நேரிடலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, பயணிகள் முன்கூட்டியே திட்டமிடுமாறும், முடிந்த இடங்களில் ஆன்லைனில் செக்-இன் செய்யுமாறும், விமான நிலைய நடைமுறைகளை முடிக்க கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குடும்பங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் விடுமுறைகளுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் திரும்புவதால், வருகை பகுதிகள் கூட்டமாகவும், இமிகிரேஷன் வரிசைகள் நீளமாகவும் இருக்கும் என்று எமிரேட்ஸ் முன்னதாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel