துபாயில் சமீப காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து மேம்பாடுகளில் முக்கிய திட்டங்களில் ஒன்றாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அல் குத்ரா சாலை மற்றும் அரேபியன் ராஞ்ச்ஸை துபாய் ஸ்டுடியோ நகரத்துடன் இணைக்கும் இணைப்புச் சாலையின் இன்டர்செக்ஷனில் ஒரு புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.
நான்கு பாதைகளைக் கொண்ட இந்த 600 மீட்டர் பாலம் அல் குத்ரா சாலையில் உள்ள முக்கிய இண்டர்செக்ஷன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த பாதை ஷேக் முகமது பின் சயீத் சாலையுடன் இன்டர்செக்ஷனில் இருந்து நீண்டு, ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட் மற்றும் எமிரேட்ஸ் சாலை வழியாகச் சென்று, அல் குத்ரா சாலை வழியாகத் தொடர்கிறது என கூறப்பட்டுள்ளது.
RTA வெளியிட்டுள்ள தகவலின் படி, புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட பாலம் அல் குத்ரா சாலை மற்றும் அரேபிய ராஞ்ச்ஸ் மற்றும் துபாய் ஸ்டுடியோ சிட்டி இடையேயான இணைப்புச் சாலையில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு மணி நேரத்திற்கு 6,600 வாகனங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு 19,200 வாகனங்களாக திறனை 191% அதிகரிக்கிறது என்றும் இன்டர்செக்ஷனில் காத்திருக்கும் நேரமும் 55% குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தாமதங்களை 113 வினாடிகளில் இருந்து 52 வினாடிகளாகக் குறைக்கிறது என கூறப்பட்டுள்ளது.
இதே போல் RTA வரும் பிப்ரவரி 15 அன்று அல் குத்ரா சாலை மற்றும் ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட் இன்டர்செக்ஷனில் புதிய பாலத்தைத் திறக்கும். 700 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் ஒவ்வொரு திசையிலும் இரண்டு பாதைகளை வழங்குகிறது மற்றும் தெற்கு (வலது பக்க) பாலத்தின் பணிகள் முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும். இது அல் குத்ரா சாலையில் அல் குத்ரா நகரத்தை நோக்கியும், ஷேக் முகமது பின் சயீத் சாலையின் திசையிலும் போக்குவரத்திற்கு சேவை செய்யும் என கூறப்படுகின்றது.
சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரும், இயக்குநர் ஜெனரலுமான மட்டார் அல் தாயர் கூறுகையில், “இந்த திட்டம் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மென்மையான இயக்கத்தை ஆதரிக்கிறது, துபாயின் நிலையான நகர்ப்புற விரிவாக்கத்திற்கு ஏற்ப செயல்படுகிறது, மேலும் எமிரேட்டின் வளர்ந்து வரும் வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை தேவைகளை நிவர்த்தி செய்கிறது” என்று கூறியுள்ளார்.
அல் தாயர் மேலும் கூறுகையில் “இந்தத் திட்டத்தில் பல முக்கிய இன்டர்செக்ஷன்களை மேம்படுத்துதல், 2,700 மீட்டர் நீளத்திற்கு பாலங்கள் கட்டுதல், அத்துடன் தற்போதுள்ள சாலையை மொத்தம் 11.6 கி.மீ நீளத்திற்கு அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். இது சாலை திறனை அதிகரிக்கும் மற்றும் பயண நேரத்தை 70% குறைக்கும், பயண நேரத்தை 9.4 நிமிடங்களிலிருந்து 2.8 நிமிடங்களாகக் குறைக்கும். இந்தத் திட்டம் குடியிருப்பு மற்றும் மேம்பாட்டுப் பகுதிகளுக்கு சேவை செய்யும், இது சுமார் 400,000 குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை தங்க வைக்கும்” என தெரிவித்துள்ளார்.
அல் குத்ரா சாலை
துபாயின் கிழக்கு – மேற்கு சாலை வழித்தடங்களை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முக்கிய திட்டங்களில் அல் குத்ரா சாலையும் ஒன்று என்று மட்டார் அல் தாயர் கூறியுள்ளனர். அத்துடன் ஷேக் முகமது பின் சயீத் சாலையுடன் இண்டர்செக்ஷனில் இருந்து எமிரேட்ஸ் சாலை வரை நீட்டிக்கப்படும் இந்த திட்டம், குறிப்பாக அரேபியன் ராஞ்ச்ஸ் 1 மற்றும் 2, துபாய் மோட்டார் சிட்டி, துபாய் ஸ்டுடியோ சிட்டி, டமாக் ஹில்ஸ் மற்றும் தி சஸ்டைனபிள் சிட்டி உள்ளிட்ட பல முக்கிய மேம்பாட்டுப் பகுதிகளுக்கு சேவை செய்கிறது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “இந்தத் திட்டம் திறனை அதிகரிக்கிறது, முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துகிறது, நெரிசலைக் குறைக்கிறது மற்றும் முக்கிய இடங்களுக்கு இடையிலான பயண நேரத்தைக் குறைக்கிறது. இது அல் குத்ரா சாலையில் எமிரேட்ஸ் சாலையை நோக்கியும், பின்னர் அல் குத்ரா நகரத்திற்கும் மென்மையான, தடையற்ற போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் சாலை பாதுகாப்பு தரங்களை மேம்படுத்துகிறது மற்றும் இந்த வழித்தடத்தால் சேவை செய்யப்படும் சமூகங்கள் முழுவதும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ஆதரிக்கிறது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.