துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளுக்கான புதிய பிரத்யேக பாதைகளை விரிவுபடுத்த உள்ளதாகவும், எமிரேட் முழுவதும் எட்டு இடங்களில் டிராக் இல்லாத டிராம் அமைப்பை ஆய்வு செய்து வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து RTA வின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் இயக்குநர் ஜெனரலும் தலைவருமான மட்டர் அல் தாயர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் 13 கி.மீ பரப்பளவில் ஆறு புதிய வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார், இது துபாயில் பிரத்யேக பேருந்து மற்றும் டாக்ஸி பாதைகளின் மொத்த நீளத்தை 20 கி.மீ ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பாதைகள் பின்வரும் ஆறு முக்கிய சாலைகளில் சேர்க்கப்படும்:
- ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா ஸ்ட்ரீட்
- செகன்ட் டிசம்பர் ஸ்ட்ரீட்
- அல் சத்வா
- அல் நஹ்தா
- உமர் பின் அல் கட்டாப் ஸ்ட்ரீட்
- நைஃப் ஸ்ட்ரீட்
தனித்துவமான நிறத்தில் குறிக்கப்பட்ட இந்த பாதைகள் பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இவற்றை தவறாகப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு 600 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
RTA அதிகாரியின் கூற்றுப்படி, இந்த விரிவாக்கம் பயணிகளின் எண்ணிக்கையை 10% அதிகரிக்கவும், பேருந்து சரியான நேரத்தில் இயக்கும் செயல்திறனை 42 சதவீதம் மேம்படுத்தவும் மற்றும் பயண நேரங்களை 41% குறைக்கவும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:
அதேசமயம், துபாய் முழுவதும் எட்டு இடங்களில் புதுமையான டிராக் இல்லாத டிராம் அமைப்பை RTA ஆய்வு செய்து வருகிறது. தற்போதுள்ள துபாய் டிராமைப் போலல்லாமல், புதிய அமைப்பு நிலையான தண்டவாளங்கள் இல்லாமல் செயல்படும் என்பது சிறப்பிற்குரியது.
RTA வெளியிட்டுள்ள விபரங்களின் படி, மின்சாரத்தால் இயங்கும் டிராம், வர்ணம் பூசப்பட்ட சாலை அடையாளங்களைப் பின்பற்ற கேமரா அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு விர்ச்சுவல் பாதையை உருவாக்கும். இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், பாரம்பரிய டிராம் அமைப்புகளை விட செயல்படுத்த மலிவானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு டிராமிலும் 300 பயணிகளுக்கான திறன் கொண்ட மூன்று வண்டிகள் இருக்கும், இது ஒரு நிலையான பேருந்தை விட மூன்று மடங்கு அதிகம். அதிகபட்ச வேகம் 70 கிமீ/மணி, இயக்க வேகம் 25 முதல் 60 கிமீ/மணி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் போக்குவரத்தை சமாளித்தல்
துபாயில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமிரேட்டில் இரண்டு ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளது, இது உலகளாவிய சராசரியான 2–4% ஐ விட கணிசமாக அதிகம் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நெரிசலைக் குறைக்க, அதிகாரிகள் பின்வருவனவற்றையும் செயல்படுத்துகின்றனர்:
- புதிய சாலை உள்கட்டமைப்பு திட்டங்கள்
- டைனமிக் டோல் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள்
- கனரக வாகன கட்டுப்பாடுகள்
- நெகிழ்வான மற்றும் தொலைதூர வேலை கொள்கைகள்
பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரித்தல்
2025 ஆம் ஆண்டில் துபாய் பொது போக்குவரத்து, பகிரப்பட்ட இயக்கம் மற்றும் டாக்சிகளில் 802 மில்லியன் பயனர்களை பதிவு செய்துள்ளதாகவும், சராசரி தினசரி பயணிகள் 2.2 மில்லியனை எட்டியுள்ளதாகவும் அல் தாயர் தெரிவித்துள்ளார்.
மேலும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்கும் அதே வேளையில் மெட்ரோ, டிராம், பேருந்து மற்றும் கடல் போக்குவரத்து நெட்வொர்க்குகளை RTA தொடர்ந்து மேம்படுத்துகிறது . இது வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் மற்றும் பார்வையிடவும் உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற துபாயின் லட்சியத்தை ஆதரிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel