ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், ஈரானிய பிரதேசத்தில் ஒரு வாரம் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், இஸ்ரேலுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ தெஹ்ரான் சரணடையாது என்று கூறியுள்ளார்.
அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில், ஈரானிய மக்களின் சரணடைதலை விரும்புவோர் “அந்த விருப்பத்தை அவர்களின் கல்லறைகளுக்கு எடுத்துச் செல்வார்கள்” என்றும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை நேரடியாக தாக்கி பேசியுள்ளார்.
அதே நேரத்தில், ஈரானிய பழிவாங்கும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் பெஷேஷ்கியன் மன்னிப்பு கேட்டுகொண்டுள்ளார். இந்த மோதல் பரந்த பிராந்தியத்தில் பரவி வருகிறது என்பதை தெஹ்ரான் உணர்ந்திருப்பதை இது குறிக்கிறது என கூறப்பட்டுள்ளது.
அவர் கூறுகையில் “ஈரானால் தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் எனது சார்பாகவும், ஈரான் சார்பாகவும் நான் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் “அண்டை நாடுகள் மீது இனி எந்த தாக்குதல்களும் நடத்தப்படாது என்றும், ஈரான் மீதான தாக்குதல் அந்த நாடுகளில் இருந்து தொடங்கப்படாவிட்டால் ஏவுகணைகள் எதுவும் வீசப்படாது என்றும் இடைக்கால தலைமைத்துவ கவுன்சில் நேற்று ஒப்புக்கொண்டது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வெள்ளிக்கிழமை இடைக்கால தலைமைத்துவ கவுன்சிலின் முடிவு இருந்தபோதிலும், மோதல் விரிவடைந்ததால், சனிக்கிழமை வளைகுடா நாடுகளை இலக்காகக் கொண்டு ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.