அமீரக தலைநகர் அபுதாபியில் அமைத்திருக்கும் ருவைஸ் தொழில்துறை வளாகத்தில் உள்ள ஒரு நிலையத்தில் ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் அபுதாபி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் தற்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறவும், வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் நினைவூட்டப்பட்டுள்ளனர்.
வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்கள் 11வது நாளாகத் தொடர்வதை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரகம் ஈரானில் இருந்து வரும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து வருகிறது.
அதில் நேற்று (மார்ச் 9 திங்கட்கிழமை), தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து ஆயுதப்படைகளைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.