ஈரானிய தாக்குதல்களை வெற்றிகரமாக அமீரகம் முறியடித்து வரும் நிலையில், வெற்றிகரமான வான் பாதுகாப்பு இடைமறிப்பின் போது ஏற்பட்ட சிதறல்கள் துபாயின் தெற்கு பகுதியில் கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த சிதறல்கள் அப்பகுதியின் குடியிருப்பு வீடுகள் மீது விழுந்ததில், சொத்து சேதம் ஏற்பட்டதுடன், நான்கு ஆசிய நாட்டினருக்கு சிறு காயங்களும் ஏற்பட்டன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நகரின் சில பகுதிகளில் கேட்கப்பட்ட உரத்த சத்தங்கள் அதே வான் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தாக்குதல்களை முறியடிப்பதற்கான வழக்கமான தற்காப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த வெடிப்புகள் நிகழ்ந்தன என்றும், குடியிருப்பாளர்களுக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றும் துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வமான ஆதாரங்களை மட்டுமே நம்புமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் குடியிருப்பாளர்கள் சிதறல்களைத் தவிர்க்கவும், மீட்புக் குழுக்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கு முன்னர் துபாய் கடல் பகுதியில் குவைத்தைச் சேர்ந்த ‘அல் சல்மி’ என்ற எண்ணெய் கப்பல் ஈரானிய ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கப்பலையும் அதைச் சுற்றியுள்ள கடற்பரப்பையும் பாதுகாக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதே போன்று துபாயின் அல் படாவில், வான் பாதுகாப்பு இடைமறிப்புத் தாக்குதலால் சிதறிய பாகங்களால் பழைய வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் சிறு காயங்களுடன் தப்பினர். மேலும், துரையா தொலைத்தொடர்பு நிறுவனக் கட்டிடத்தை குறிவைத்த ஆளில்லா விமானத் தாக்குதல் சம்பவத்தை ஷார்ஜா அதிகாரிகள் கையாண்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது