ஷார்ஜாவில், நேற்று (ஏப்ரல் 1, புதன்கிழமை), மழைநீர் தேங்கியிருந்த ஒரு குட்டையில் மூழ்கி ஒரு சிறுவன் உயிரிழந்ததாக ஷார்ஜா காவல்துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இரவு 7.05 மணிக்கு சார்ஜாவின் கல்பா பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சிறப்பு மீட்புக் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, அக்குழந்தை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, அந்த 12 வயது சிறுவனை காப்பாற்ற முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து மழைநீர் தேங்கும் இடங்களில் நீந்துவதற்கு எதிராக ஷார்ஜா காவல்துறை எச்சரித்துள்ளதுடன், குழந்தைகள் மீது அதிகக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும் வலியுறுத்தியுள்ளது. மழைநீர் தேங்கும் இடங்களை நெருங்குவது அல்லது அங்கு நீந்துவது ஆபத்தானது என்றும், அது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு கடுமையான அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அமைப்பு பெற்றோரை எச்சரித்துள்ளது.
மழைநீர் தேங்கும் இடங்களில் சீரற்ற ஆழம், ஆபத்தை மதிப்பிடுவதில் உள்ள சிரமம், திடீர் நிலச்சரிவுகள் மற்றும் நிலையற்ற மண் அமைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது போன்ற காரணங்களால், நீரில் மூழ்கும் விபத்துகள் அல்லது கடுமையான காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்றும், எனவே தங்கள் குழந்தைகளின் இருப்பிடத்தைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் குழந்தையின் குடும்பத்தினருக்கு காவல்துறை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்ததோடு, குடும்பக் கண்காணிப்பை ஊக்குவிப்பது, அனுமதிக்கப்படாத இடங்களில் நீந்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவது, மற்றும் ஏற்படக்கூடிய அபாயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க உதவும் தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடத்தையையும், பொதுவான விசாரணைகள் மற்றும் அவசரமற்ற நிகழ்வுகளுக்கு 901 என்ற எண்ணிலும், அவசர காலங்களில் 999 என்ற எண்ணிலும் புகாரளிக்குமாறு சமூக உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.