கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஏப்ரல் 5 அன்று ஈரானிலிருந்து ஏவப்பட்ட 9 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 1 குரூஸ் ஏவுகணை மற்றும் 50 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாத இறுதியில் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, அமீரகம் மொத்தம் 507 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 24 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 2,191 ட்ரோன்களை எதிர்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மாதக் கணக்கில் நீடிக்கும் வான்வழி அச்சுறுத்தல்களின் அளவைப் பிரதிபலிக்கிறது. அத்துடன் இதுவரை 217 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

அதிகரித்து வரும் போர்ப் பதட்டங்களுக்கு மத்தியில், நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும், இடைமறிப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய உரத்த சத்தங்கள் நாடு முழுவதும் கேட்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய மற்றொரு சம்பவத்தில், இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறிய பாகங்கள் அபுதாபியில் உள்ள போரூஜ் ஆலையில் (borouge) விழுந்ததால் பல தீ விபத்துகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சிதறல்களால் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், சேதம் மதிப்பிடப்படும் வரை ஆலையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், போரூஜ் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சம்பவத்தின் போது அவசரகாலக் குழுக்கள் விரைந்து செயல்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய நெருக்கடியான சூழலில் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே நம்புமாறும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.
சமீபத்திய நாட்களாக வளைகுடா முழுவதும் உள்ள தொழிற்சாலை மற்றும் உள்கட்டமைப்புத் தளங்களைத் தாக்குவதாக ஈரானியப் படைகள் கூறியுள்ள நிலையில், பிராந்தியத்தில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த சமீபத்திய நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel