துபாயின் அல் கைல் சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட ஒரு பயங்கர விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
கீழே விழுந்த வாகனப் பதிவு எண்ணை (number plate) எடுப்பதற்காக ஒரு ஓட்டுநர் சாலையின் நடுவில் வாகனத்தை நிறுத்தியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சரியான நேரத்தில் கவனிக்கத் தவறிய மற்றொரு ஓட்டுநர், அந்த நபர் மீது மோதியதுடன், நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீதும், மூன்றாவது வாகனத்தின் மீதும் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகனம் மோதிய வேகத்தில் விபத்துக்குள்ளான நபர் படுகாயமடைந்ததாகவும், மற்ற இருவர் மிதமான காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வாகனம் பழுதாகுவது, எரிபொருள் பற்றாக்குறை அல்லது டயர் பிரச்சனைகள் உட்பட எந்தக் காரணத்திற்காகவும் சாலையின் நடுவில் வாகனத்தை நிறுத்துவதற்கு எதிராக துபாய் காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற செயல்கள் மிகவும் ஆபத்தானவை என்றும், கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சாலையில் வாகனத்தை நிறுத்தினால் 1,000 திர்ஹாம் அபராதம் மற்றும் ஆறு போக்குவரத்துப் புள்ளிகள் விதிக்கப்படும் என்றும், போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தால் கூடுதலாக 500 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும் என்றும் வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டப்பட்டது.
ஆகவே, காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, வாகனம் பழுதடைந்தால், ஓட்டுநர்கள் அபாய விளக்குகளை எரியவிடவும், எச்சரிக்கை முக்கோணத்தை வைக்கவும், போக்குவரத்து நெரிசலிலிருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும், மேலும் உதவிக்காக உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel