கடந்த சில நாட்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலையற்ற வானிலை நீடிப்பதால், அபுதாபி, துபாய் மற்றும் அல் அய்ன் உள்ளிட்ட சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தரை மற்றும் மேல்-காற்று குறைந்த அழுத்த அமைப்புகளின் கலவையால் இந்த வானிலை உருவாகிறது. இது பல பிராந்தியங்களில் மேகங்கள் உருவாகுவதற்கும், ஆங்காங்கே மழை பொழிவதற்கும் வழிவகுக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், ஐக்கிய அரபு அமீரகத்தைப் பாதிக்கும் தீவிர வானிலை அமைப்புகளைக் காட்டும் 3D மேக உருவாக்கம் (3D cloud formation) குறித்த சமீபத்திய தகவலையும் NCM பகிர்ந்துள்ளது, இதில் அபுதாபி, துபாய் மற்றும் அல் ஐன் ஆகிய இடங்களில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் Storm_ae பகிர்ந்த வீடியோக்களும் பல பகுதிகளில் மழை பொழிவதைக் காட்டுகின்றன.
இந்த நிலைமைகள் வெப்பச்சலன மேகங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதாகவும், இதன் விளைவாக நிலையற்ற வானிலை ஏற்படுவதாகவும், மழை, புழுதி மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
NCM வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை மிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மற்றும் உள் பகுதிகளில் 31°C முதல் 34°C வரை வெப்பநிலை இருக்கும், அதே நேரத்தில் மலைப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 20°C வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கடலோரப் பகுதிகளில் ஈரப்பதம் 85 சதவீதம் வரை எட்டக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காற்றின் வேகம் லேசானது முதல் மிதமானது வரை இருக்கும், ஆனால் குறிப்பாக மேகமூட்டத்தின் காரணமாக அவ்வப்போது வேகம் அதிகரிக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் நிலைமைகளைப் பொறுத்தவரை, அரேபிய வளைகுடாவில் கடல் நிலை லேசானது முதல் மிதமானது வரை இருக்கும் என்றும், அவ்வப்போது சீற்றமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஓமான் கடல் ஒப்பீட்டளவில் அமைதியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை நீடிக்கும் என்பதால், அதிகாரிகள் பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளனர். அபுதாபி காவல்துறை மற்றும் துபாய் காவல்துறை வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுமாறு வலியுறுத்தியுள்ளன. மழை மற்றும் புழுதி நிலவும் சமயங்களில், ஓட்டுநர்கள் வேகத்தைக் குறைக்கவும், பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிக்கவும், சிக்னல் விளக்குகளைப் பயன்படுத்தவும், மற்றும் தெளிவான பார்வை இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வரும் நாட்களில் இதேபோன்ற வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிக மேகமூட்டம், ஆங்காங்கே மழை, மற்றும் மணிக்கு 45 கி.மீ. வரை வேகத்தில் வீசும் பலத்த காற்று ஆகியவை புழுதிப் புயலையும் குறைந்த பார்வைத்திறனையும் ஏற்படுத்தக்கூடும். திங்கட்கிழமை வானிலை பகுதி மேகமூட்டத்துடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பொதுவாக தெளிவானது முதல் பகுதி மேகமூட்டத்துடன் கூடிய வானம் காணப்படும், குறிப்பாக அரேபிய வளைகுடாவில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel