விளையாட்டு

டெல்லியில் IPL போட்டிகள் நடைபெற தடை…!!! டெல்லி அரசு அறிவிப்பு..!!!

உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவின் அச்சத்தையொட்டி உலகம் முழுவதும் பல விதமான நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், கூட்டங்கள் போன்ற மக்கள் பெரிதளவு கூடும் நிகழ்வுகள் தடை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் நடக்கும் IPL கிரிக்கெட் போட்டியானது இந்த வருடம் மார்ச் 29 ம் தேதி தொடங்கப்பட திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்பொழுது பரவி வரும் கொரோனா வைரஸின் பயத்தையொட்டி போட்டி நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கும் IPL போட்டிக்காக ஏற்கெனவே சில வீரர்கள் தங்கள் பயிற்சியைத் தொடங்கியிருந்தனர். குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி சமீபத்தில் சென்னை வந்து போட்டிக்காக பயிற்சி எடுக்க தொடங்கியிருந்தார்.

ஏற்கெனவே கொரோனாவின் பாதிப்பையொட்டி, கூட்டமான இடங்களை மற்றும் நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் போட்டியை ஒத்தி வைக்கலாமா அல்லது குறிப்பிட்ட தேதியிலேயே நடத்தலாமா என்பது குறித்த முடிவானது நாளை (மார்ச் 14) நடைபெற இருக்கும் ஆலோசனைக்கூட்டத்தில் தெரிய வரும் என IPL நிர்வாகக் குழு கூறியுள்ளது. இந்த ஆலோசனைக்கூடத்தில் IPL அணியின் அனைத்து உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்பொழுது டெல்லி அரசானது IPL போட்டிகள் டெல்லியில் நடக்க தடை விதித்துள்ளது. ஏற்கெனவே அங்கு கொரோனா பாதிப்பு இருப்பதால், கொரோனா பரவுவதை தடுக்க டெல்லி அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, பெருமளவு ரசிகர்கள் கூடும் நிலை ஏற்படும் என்பதால் IPL போட்டிகளுக்கு தடை விதிப்பதாக டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கையாக இம்மாதம் 31 ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு டெல்லி அரசு விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்பொழுது IPL போட்டிக்கும் தடை விதித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!