ஐக்கிய அரபு அமீரகத்தின் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கி சிறிது நாட்களே ஆன நிலையில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் கல்வி அமைச்சகம் (MoE) வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள பள்ளிகள் வெள்ளிக்கிழமை (மே 8) வரை மீண்டும் தொலைதூரக் கற்றலுக்கு மாறியுள்ளன என கூறப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று (மே 4) குடியிருப்பாளர்களுக்கு அவசரகால எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 9 அன்று அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதலில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, நேற்று முதன் முதலாக மீண்டும் ஈரானிய ஏவுகணைகள் கண்டறியப்பட்டதால், ஐக்கிய அரபு அமீரகத்தின் அவசரகால எச்சரிக்கை அமைப்பு மூன்றரை மணி நேரத்திற்குள் ஐந்து முறை செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, கல்வி அதிகாரிகளும் பள்ளி நிர்வாகங்களும் கல்வி நடவடிக்கைகளின் தொடர்ச்சியை உறுதிசெய்து, தொலைதூரக் கற்றலுக்கு மாற்றப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்றும், மேலும் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு, வகுப்புகள் திட்டமிட்டபடி இணையவழியில் தொடரும் என கூறப்பட்டுள்ளது.
ஏறக்குறைய ஏழு வாரத் தொலைதூரக் கல்விக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள மாணவர்கள் ஏப்ரல் 20, திங்கட்கிழமை அன்று நேரடிக் கற்றலை மீண்டும் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த சமீபத்திய மாற்றம் வந்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதலுடன் தொடர்புடைய பிராந்தியப் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தொலைதூரக் கற்றல் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மாறிவரும் சூழ்நிலைகளைப் பொறுத்து, நிறுவனங்கள் நேரடி மற்றும் தொலைதூரக் கற்றலுக்கு இடையில் மாறத் தயாராக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் முன்னரே தெளிவுபடுத்தியிருந்தனர். இந்த நிலையில் அந்த உத்தரவு இப்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.