அமீரக செய்திகள்

அமீரகம் : குற்றவாளிகளைத் துல்லியமாகக் கண்டறிய உதவும் ஸ்மார்ட் ரோந்து திட்டம் அறிமுகம்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி காவல்துறை தற்பொழுது குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்பதற்கு ஒரு புதிய யுக்தியைக் கையாள திட்டமிட்டிருக்கிறது. அபுதாபி காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்மார்ட் ரோந்து திட்டத்தின் (Smart Patrol System) மூலம் வீதியில் சுதந்திரமாக நடமாடும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

போலீஸ் வாகனங்களின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு ஸ்மார்ட் பார்(smart bar) குற்றவாளியின் முக அடையாளத்தைத் துல்லியமாகக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹைடெக் அமைப்பு மத்திய செயல்பாட்டுத் துறையின் சேவையகத்துடன் இணைக்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட முகம் அதன் மென்பொருள் கண்காணிப்பு பட்டியலில் உள்ள குற்றவாளிகளின் முகங்களுடன் ஒத்துப்போகிறதா என சரி பார்த்து தகவல்களை அனுப்பும்.

ஒரு வேளை குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டால், அந்த இடத்திலுள்ள காவல்துறை அதிகாரி அதற்கடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு உடனடியாக தகவல் அனுப்புவார்.

அபுதாபி காவல்துறை அதிகாரி ஒருவர் இது பற்றிக் கூறுகையில் “நாங்கள் இதை ‘ஸ்மார்ட் பார்’ என்று அழைக்கிறோம், இது ஸ்மார்ட் ரோந்துக்கு பயன்படுத்தப்படும். இதன் மூலம் தெருக்களில் செல்வோரின் முக அடையாளம் உள்வாங்கப்படும். நாங்கள் தேடும் குற்றவாளிகள் யாரேனும் இருந்தால் அடையாளம் காணப்பட்டு எங்களுக்கு தகவல் அளிக்கப்படும். இது வரும் மாதங்களில் தொடங்கப்படும். அனைத்து வாகனங்களும் ஒன்றாக மாற்றப்படாது. ஒவ்வொரு பிரிவாக ஒரே நேரத்தில் 5 முதல் 10 வாகனங்களுக்கு பொருத்தப்படும்” என்று தெரிவித்தார்.

வாகனங்களில் பொருத்தப்படும் ஸ்மார்ட் பார் வெவ்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது மற்றும் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

முகம் அடையாளம் காணும் முறை தவிர ஸ்மார்ட் பாரில், சந்தேகத்திற்குரிய கார்களின் எண்களைக் கண்டறிய முடியும். மேலும், இதில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதன் மூலம் அதி வேகமாக செல்லும் வாகனங்களையும் பிற போக்குவரத்து மீறல்களையும் கண்காணிக்க முடியும்.

இந்த முன்னேற்றங்களுக்கு மத்தியில், வானிலை நிலவரங்களை கண்காணிக்கவும், சாலை விதிகளை மீறும் ஓட்டுநர்களைக் கண்டறியவும் அபுதாபி-அல் அய்ன் சாலையில் முதல் ஸ்மார்ட் கேட்டை காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.

இந்த முயற்சிகள் அபுதாபி காவல்துறையின் வளர்ந்து வரும் ஸ்மார்ட் தொழில்நுட்பங்களின் பட்டியலில் கூடுதல் சேர்க்கையாகும்.

அபுதாபி காவல்துறை பயன்படுத்தும் வேறு சில தொழில்நுட்பங்கள்

  • போக்குவரத்து ஓட்டத்தை கண்காணிக்கவும், நெரிசல்களைக் கண்டறியவும், ஹாட்ஸ்பாட்களில் நேரடி ரோந்துப் பணிகளுக்காகவும் காவல்துறையினர் ட்ரோன்களைப் (drones) பயன்படுத்துகின்றனர்.
  • சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு மின்னணு செய்திகளின் மூலம் எச்சரிக்கை செய்யும் ஸ்மார்ட் டவர் சிஸ்டமும் இவர்களிடம் உள்ளது. இது “ரெட்லைட் ரன்னர்களைப் பிடிப்பது”, “போக்குவரத்து பாதுகாப்பு மேலாண்மை”, “போக்குவரத்து விபத்துகளை பகுப்பாய்வு செய்தல்”, “ஸ்மார்ட் போக்குவரத்து விழிப்புணர்வு” மற்றும் “திசைதிருப்பல்கள் மற்றும் கனரக வாகன மேலாண்மை” போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது.
  • மேலும், ‘ஸ்மார்ட் கண்ணாடிகள்’ அல்லது பெரிதாக்கப்பட்ட மெய்நிகர் ரியாலிட்டி கண்ணாடிகள் (augmented virtual reality glasses) உள்ளன, அவை அதிகாரிகள் குற்றவாளிகளைப் பிடிக்க அல்லது தேடுகின்ற நபர்களைப் பிடிக்க உதவுகின்றன. இந்த கண்ணாடிகளில் மைக்ரோ கேமரா உள்ளது, இது AI டெக்னாலஜியை பயன்படுத்தி தானாகவே நூற்றுக்கணக்கான முகங்களை ஸ்கேன் செய்து, தேவைப்படும் நபரைக் கண்டறியும்போது அதிகாரிகளுக்கு அறிவிக்கும்.
  • மேலும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு தொழில்நுட்பம் மற்றும் கண்காணிப்பு மென்பொருள் போன்றவற்றையும் காவல்துறை பயன்படுத்துகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!