அமீரக செய்திகள்

அமீரகத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு : சுகாதார அமைச்சகம் அறிவிப்பு!!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) திங்களன்று கொரோனா வைரஸால் மேலும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இது அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 59 ஆக உயர்த்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட 14 பேரில் நான்கு அமீரக குடிமக்கள், மூன்று இத்தாலியர்கள், பங்களாதேஷை சேர்ந்த இரண்டு நபர்கள், இரண்டு நேபாளர்கள், ஒரு ரஷ்யர், ஒரு இந்தியர் மற்றும் ஒரு சிரிய நாட்டை சேர்ந்தவர் ஆகியோர் அடங்குவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கெனவே நோய்தொற்று இருந்தவர்களிடம் தொடர்பு கொண்டவர்கள் என்றும், ஏற்கெனவே வைரஸ் பாதிப்பு உள்ளவர்களையும் அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்களையும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வந்ததில் தற்பொழுது தெரிய வந்ததாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சுகாதார அமைச்சகம் பொதுமக்களை, சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்கவும், நோய் பரவாமல் தடுக்க அதன் இணையதளத்தில் வழங்கப்படும் உதவிக்குறிப்புகளைப் பார்க்கவும் வலியுறுத்தியுள்ளது.

சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை நன்றாக கழுவுதல், கிருமிகள் மற்றும் வைரஸ்கள் பரவாமல் தடுக்க இருமல் அல்லது தும்மல் வரும் போது மூக்கு மற்றும் வாயை மூடுவது உள்ளிட்ட தொற்று நோய்களிலிருந்து தனிநபர்களைப் பாதுகாக்க உதவும் ஆரோக்கியமான பழக்கங்களை கடைப்பிடிக்க சுகாதார அமைச்சகம் மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் பொது மக்களுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

மேலும், சுவாசப் பிரச்சனை உடையவர்கள் நெரிசலான இடங்களில் கலப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்கள் போலியான செய்திகளையும் வதந்திகளையும் நம்ப வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!