அமீரக செய்திகள்

அமீரக நாணயத்தை அவமதித்து டிக்டாக் வீடியோ வெளியிட்டவரை கைது செய்த துபாய் போலீஸ்..!! எச்சரிக்கை..!!

துபாயில் வசிக்கும் வெளிநாட்டினர் ஒருவர் சமூக ஊடகமான டிக்டாக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய நாணயத்தை அவமதிக்கும் விதமாக வீடியோ செய்து வெளியிட்ட குற்றத்திற்காக துபாய் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக துபாய் போலீஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகமான டிக்டாக்கில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் தோன்றும் அந்த நபர், தும்மியவுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் பணத்தாளைக் கொண்டு தனது மூக்கைத் துடைத்து விட்டு பின்பு அதனை தூக்கி தரையில் வீசுவது போன்று டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு அதிகம் நபர்களால் ஷேர் செய்யப்பட்ட அந்த வீடியோ குறித்து துபாய் காவல்துறையினர் எச்சரிக்கை செய்ததுடன், வீடியோவில் தோன்றிய நபர் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு அமீரகத்தின் தேசிய நாணயத்தை அவமதித்த குற்றத்திற்காக அவரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வசம் ஒப்படைத்ததாவும் துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சைபர் கிரைம் சட்டத்தின் 29 வது பிரிவின்படி, ஐக்கிய அரபு அமீரகம் அல்லது அதன் எந்தவொரு நிறுவனத்தின் நற்பெயர், கவுரவம் அல்லது அந்தஸ்துக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் ஏதேனும் தகவல், செய்தி அல்லது விபரங்களை ஆன்லைனில் வெளியிடும் எவருக்கும் சிறைத்தண்டனை மற்றும் 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!